பெர்க்ஷயர் ஹாத்வேயின் நீண்டகால தலைமை நிர்வாக அதிகாரியும், உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளருமான வாரன் பஃபெட், 2025 ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்தார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 133 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்காரராக வாரன் பஃபெட் இருந்து வருகிறார்.
2025 ஆண்டு கூட்டத்தில், வாரன் பஃபெட் தனது மிகவும் நம்பகமான நிர்வாகிகளில் ஒருவரான அஜித் ஜெயினிடம் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த கேள்வியை எழுப்பியிருந்தார். அப்போது, மாற்றங்களை ஏற்படுத்தி வரும் ஏஐ தொழில்நுட்பம் பற்றி குறிப்பாக, காப்பீட்டில் ஆபத்து மதிப்பீடு, விலை நிர்ணயம் மற்றும் உரிமைகோரல் கையாளுதலை எவ்வாறு மாற்ற முடியும் என்பதில் அதன் திறனையும் ஜெயின் விவரித்தார்.
எவ்வாறாயினும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பெர்க்ஷயர் ஒருபோதும் முன்னிலை வகிக்கவில்லை என்பதை குறிப்பிட்ட அவர், மிகைப்படுத்தலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது குறித்தும் எச்சரித்தார். மேலும், அதற்கு பதிலாக ஒரு எச்சரிக்கையான, அளவிடப்பட்ட அணுகுமுறையை ஜெயின் வலியுறுத்தினார். “இந்த முயற்சியில் நாங்கள் இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை. ஆனால் தேவைப்பட்டால், அதற்கான வாய்ப்பு வந்தால் உடனடியாக நாங்கள் களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
யார் இந்த அஜித் ஜெயின்?
$889 பில்லியன் மதிப்புள்ள பெர்க்ஷயர் ஹாத்வேயின் காப்பீட்டு நடவடிக்கைகளின் துணைத் தலைவரான அஜித் ஜெயின், அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க இந்திய தலைவர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். ஒடிசாவில் பிறந்த ஜெயினின் கல்விப் பயணமானது, ஐஐடி கரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்று, அதைத் தொடர்ந்து ஹார்வர்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெறுவது வரை சென்றது. ஐபிஎம் மற்றும் மெக்கின்சியில் பணியாற்றிய பிறகு, ஜெயின் 1986இல் பெர்க்ஷயர் ஹாத்வேயில் சேர்ந்தார்.
வாரன் பஃபெட், ஜெயினின் திறன்களை அடிக்கடி பாராட்டியுள்ளார். அதில், குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், இந்தியாவில் உள்ள அஜித் ஜெயினின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் “அஜித் ஜெயினைப் போல உங்களுக்கு வேறு மகன்கள் யாரும் இருக்கிறார்களா?” என்று கேட்ட அவர், அஜித்தைப் போல யாருமே இல்லை என்று அவரைப் பாராட்டியுள்ளார்.
பங்குதாரர்களுக்கான கடிதங்களில், ஜெயினின் “வெற்றிகரமான முடிவு” குறித்து பாராட்டியிருக்கும் பஃபெட், “மற்றொரு அஜித் இருந்தால், நீங்கள் என்னை அவருக்காக மாற்றிக் கொள்ளலாம், தயங்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். ஆபத்தை மதிப்பிடுவதிலும், விலையை நிர்ணயிப்பதிலும் ஜெயினின் நிபுணத்துவம் பெர்க்ஷயர் பங்குதாரர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்பை ஈட்டித் தந்துள்ளது. மேலும், 37 பில்லியன் டாலர் மிதவை மற்றும் நிலையான காப்பீட்டு லாபத்துடன், காப்பீட்டு வணிகத்தை உருவாக்கியதற்காக பஃபெட் அவரைப் பாராட்டினார்.
200 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்பைக் கொண்ட ஜெயின், பெர்க்ஷயரின் வெற்றியின் இன்றியமையாத பகுதியாக இருந்து வருகிறார். கிரெக் ஆபெல் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயினின் தனித்துவமான திறமைகளையும், பெர்க்ஷயரின் காப்பீட்டு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பதில் அவரது முக்கியப் பங்கையும் பஃபெட் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.

