Last Updated:
தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் குறைந்துள்ளன
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 57 ஆவது லீக் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினர். குர்பாஸ் 9 பந்துகளில் தலா 1 சிக்சர் பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நரைன் 17 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
கேப்டன் ரஹானே பொறுப்புடன் விளையாடி 33 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். மனிஷ் பாண்டே 36 ரன்களும், ஆண்ட்ரே ரசல் 38 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 179 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு அதிர்ச்சிகரமான தொடக்கம் அமைந்தத. தொடக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே, டெவோன் கான்வே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அறிமுக வீரர் உர்வில் படேல் 11 பந்துகளில் 4 சிக்சர் 1 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அஷ்வின் 8 ரன்னிலும் ஜடேஜா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெவால்ட் ப்ரூவிஸ் 25 பந்துகளில் தலா 4 சிக்சர் 4 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்து ஆட்டத்தை வெற்றியின் பக்கம் கொண்டு சென்றார்.
19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி 17 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இது சென்னை அணி நடப்பு தொடரில் பெறும் 3 ஆவது வெற்றியாகும். தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.
May 07, 2025 11:20 PM IST


