ஸ்கூட் (Scoot) விமானத்தில் பயணித்த சிங்கப்பூர் பயணியிடமிருந்து பணம் மற்றும் கிரெடிட் கார்டைத் திருடியதாக ஒரு திருட்டு குற்றச்சாட்டை வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சாங்கி விமான நிலையத்தில் செண்டு, மிட்டாய்களை திருடிய வெளிநாட்டவர் கைது
கடந்த மார்ச் 16 அன்று, கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஜாங் குன் என்ற சீன சுற்றுலா பயணியும், பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பயணியும் பயணித்துள்ளனர். ஜாங், மூன்று வரிசை பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.
பயணத்தின் போது, பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பயணியும் அவரது வருங்கால மனைவியும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக விமானத்தின் பின்புறத்தில் உள்ள நண்பர்களுடன் ஒன்றாக சேர வேண்டி தங்கள் இருக்கைகளை விட்டு அங்கு சென்றனர்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஜாங், பாதிக்கப்பட்ட ஆடவரின் இருக்கைக்கு சென்றார். இருக்கையின் மேலே வைக்கப்பட்டு இருந்த பயணப்பையை எடுத்துச்சென்று அதிலிருந்து S$200 மற்றும் RM100 (US$180) மற்றும் ஒரு கிரெடிட் கார்டை திருடியதாக சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் அவர் பயணப்பையை மீண்டும் இருக்கையின் மேலே வைத்துள்ளார். இதனை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த சிங்கப்பூர் பயணி கவனித்து, பாதிக்கப்பட்ட சக சிங்கப்பூரரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் பொருட்கள் காணாமல் போனதை அவர் உறுதிப்படுத்தினார்.
விமானம், சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டார். பிறகு ஜாங் கைது செய்யப்பட்டார்.
ஆனால், திருடப்பட்ட பொருட்களை ஜாங் ஏற்கனவே அப்புறப்படுத்திவிட்டதால் அவற்றை மீட்டெடுக்க முடியவில்லை எனவும் கூறப்பட்டது.
திருட்டு சம்பவத்துக்கு பிறகு ஜாங் அடிக்கடி கழிவறை சென்றுவந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதே விமானத்தில் இன்னொருவரும் ஜாங்கிற்கு உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
Top Photo: Reuters

