சபையில் லலித் வர்ணகுமார MP நேற்று உரை
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையை இடைநிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவினால் தாம் உட்பட 225 எம்.பிக்களினதும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன எம்.பி. லலித் வர்ணகுமார பாராளுமன்றத்தில் சிறப்புரிமையொன்றை நேற்று முன்வைத்தார்.
மேற்படி மனுமூலம் பாராளுமன்றத்துக்கு உள்ள நிதி தொடர்பான அதிகாரம் நீதிமன்றத்தினூடாக களவாடுவதற்கா என்ற கடும் சந்தேகம் உருவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் நேற்று சபையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 148ஆவது யாப்புக்கு இணங்க அரசாங்கத்தின் நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உரியது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களையும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கான முக்கிய 3 நிறுவனங்களாக தேசிய வருமான வரி திணைக்களம், சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் ஆகியன காணப்படுகின்றன.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் தேசிய வருமான வரி திணைக்களத்தினூடாக 2024 பில்லியன் ரூபா இலக்கு எதிர்பார்க்கப்படுவதுடன், சுங்கத் திணைக்களம் மூலம் 1333 கலால் திணைக்களம் மூலம் 232 பில்லியனும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வருமானத்தை சேர்ப்பது மற்றும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பாராளுமன்றத்தில் நிதி திட்டமிடல் மற்றும் அது தொடர்பான தெரிவுக் குழு மூலம் பொருளாதாரம் தொடர்பான ஏனைய மேற்பார்வை தெரிவுக் குழு மூலமும் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்

