Last Updated:
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றாலும் குற்றவாளிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றாலும், அவரும் அந்த எண்ணத்தோடே செயல்பட்டவர் என்ற அடிப்படையில் குற்றவாளிதான் என உச்சநீதிமன்றம் கடந்த 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மாயமானார். பின்னர், ராஜு எனும் நபருடன் உறவில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து அவர் கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ராஜு மற்றும் ஜலந்தர் ஆகிய இருவரும் தன்னை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ராஜு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, குற்றவாளி ராஜு, தான் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், ஜலந்தருக்கு உதவி மட்டுமே செய்ததாகவும், குற்றத்தில் தனது பங்கு குறைவு என்றும் வாதங்களை முன்வைத்துள்ளார்.
வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் இருந்த ஒரு நபர், வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றாலும், அவரது நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது எனும் அடிப்படையில் அவரும் குற்றவாளிதான் எனத் தெரிவித்து ராஜு தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


