Last Updated:
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி இமாசல பிரதேசத்தில் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்ன இணைந்த பிரப்சிம்ரன் மற்றும் ஜோஷ் இங்லீஷ் இணை பவர் ப்ளேயில் அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இங்லீஸ் 14 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் அரைச்சதம் கடந்தார். வழக்கம்போல ரன்களை குவித்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்தார்.
48 பந்துகளில் 7 சிக்சர் 6 பவுண்டரியுடன் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். நேகல் வதேரா 16 ரன்களும், சஷாங்க் சிங் 33 ரன்களும், ஸ்டாய்னிஸ் 15 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 236 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி லக்னோ அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். எய்டன் மார்க்ரம் 13 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேவிட் மில்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து இணைந்த ஆயுஷ் பதோனி – சமத் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தது.
இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 24 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து சமத் ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 40 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
May 04, 2025 11:27 PM IST


