மக்களவைத் தேர்தலுக்கான, முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பே, வெற்றியைத் தொடங்கிவிட்டது மத்தியில் ஆளும் பாஜக. ஆம் அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
சென்னை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு மக்களை மட்டுமே கொண்டுள்ளது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசம்.
சுமார் 18 லட்சம் மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 19ஆம் தேதி, மக்களவைத் தேர்தலுடன் , அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. அருணாச்சலப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 34 வேட்பாளர்களைக் களமிறங்கியது.
இவர்களைத் தவிர தேசிய மக்கள் கட்சி 29 வேட்பாளர்களையும், என்சிபி அருணாச்சல் கட்சி 17 வேட்பாளர்களையும், அருணாச்சலப் பிரதேசமக்கள் கட்சி 2 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
இதில் 5 சட்டப் பேரவை தொகுதிகளில் பாஜகவைத் தவிர, எதிர்க்கட்சிகளில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தவாங் மாவட்டத்தில் உள்ள முக்தோ சட்டப்பேரவை தொகுதியில் முதலமைச்சர் பெமா காண்டு வேட்புமனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் களமிறங்காததால் நான்காவது முறையாக போட்டியின்றி சட்டமன்றத்திற்கு தேர்வாகினார்.
முதலமைச்சர் பெமா காண்டுவைத் தவிர, தாலி தொகுதியில் ஜிக்கே டகோ, தலிஹா தொகுதியில் நியதோ துகம் ஆகியோரும், சாகலீ தொகுதியில் ரது டெச்சி மற்றும் ரோயிங்கிலிருந்து முட்சு மிதி ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் மேலும் 5 தொகுதிகளில் பாஜகவைத் தவிர்த்து இதர வேட்பாளர்கள் அனைவரும் மனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால் மொத்தம் 10 தொகுதிகளில் பாஜக எம்எல்ஏக்கள் போட்டியின்றி சட்டப்பேரவைக்கு தேர்வாகினர்.
அருணாச்சலபிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், போட்டியின்றி தேர்வாவது ஒன்றும் புதிதல்ல. இதேபோல் 2014 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 11 பேர் போட்டியின்றி எம்எல்ஏ-களாக தேர்வாகினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி, 10 ஆண்டுக்குப் பின் இப்போது பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.
வாக்குப்பதிவுக்கு முன்பே, 10 இடங்களில் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாஜக, ஆட்சியைத் தக்கவைக்க மீதமுள்ள 50 தொகுதிகளில் 30ல் வெற்றிபெற்றாலே போதும்..
2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் 4 இடங்களில் மட்டும் வெற்றி கண்டிருந்தது.
தற்போது முதலமைச்சராக உள்ள பெமா காண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, அருணாச்சல மக்கள் கட்சிக்கு சென்று பின் பாஜகவில் இணைத்துக் கொண்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு அருணாச்சலபிரதேசத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்ற, முதலமைச்சர் பொறுப்பை பெமா காண்டு தொடர்ந்தார்
இதையும் படிங்க:
அருணாச்சல்லில் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா.. மீண்டும் அத்துமீறல்!
சட்டமன்றத் தேர்தலில் 10 இடங்களில் போட்டியின்றி பாஜக வெற்றி பெற்றபோதிலும், அருணாச்சலபிரதேசத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்குப்பதிவு முன்பே கிடைத்த வெற்றியை பாஜகவினர் பட்டாசு வெடித்துக்கொண்டாடினர். இது பிரதமர் மோடி மற்றும் அவரது தொலைநோக்கு திட்டங்களுக்கான வெற்றி என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
