சமீபத்தில் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். இவர் 2024 தேர்வில் அகில இந்திய அளவில் 142-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த அடிபா, அஷ்பக் ஷேக்கின் என்ற ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகள் ஆவார். இவர் படிக்கும் காலத்தில் படிப்புச் செலவுக்குப் பணம் இல்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு படிப்பைத் தொடர முடியாமல் போனது. தனது மகளுக்கும் இதேபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், அடிபாவுக்கு வலுவான நிதி மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்தார்.
அடிபா அனாம் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, விவசாயம் பொய்த்துப் போன பூமியில் கொண்டாடுவதற்கு ஒரு காரணத்தை இது அளித்தது. குறைந்த நிதி வளங்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடு இருந்தபோதிலும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற தனது குழந்தைப் பருவக் கனவை அவர் துரத்தினார். “இந்தப் பயணத்தில் நான் பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஆனாலும், நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றேன்” என்று அடிபா கூறுகிறார்.
பள்ளி நாட்களிலிருந்தே திறமையான மாணவியாக இருந்து வருகிறார் அடிபா. 10-ம் வகுப்பில் 98% மற்றும் 12ம் வகுப்பில் 97% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் முதல் இரண்டு முயற்சிகளில் ஒருமுறை நேர்காணல் சுற்றுக்கு வந்து பின்னடைவுகள் சந்தித்தபோதிலும், மன உறுதியுடன் இருந்தார்.
மூன்றாவது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, மாநிலத்தின் முதல் தரவரிசைப் பெற்றவர்களில் ஒருவராக மாறியதால், அடிபா இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். ஹாஜ் ஹவுஸ் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமும், ஜாமியா குடியிருப்பு பயிற்சி அகாடமியும் இவரது வெற்றிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
“என் அம்மாவும், அப்பாவும் ஒருபோதும் சமூக அழுத்தத்தை என் மீது திணிக்கவில்லை. வெளியாட்களின் விமர்சனங்களிலிருந்து என்னைப் பாதுகாத்து, தொடர்ந்து படிக்க ஊக்குவித்தனர்” என்று கூறும் அடிபா, தனது தாய்மாமாவால் தனது கனவு வடிவமைக்கப்பட்டதாகவும், அவர் தனது அரசு சாரா நிறுவனத்தின் மூலம் அரசு ஊழியர்களை அறிமுகப்படுத்தியதாகவும் கூறுகிறார்.
பல தலைவர்கள் இவரது வெற்றியைப் பாராட்டியுள்ளனர். அதில் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் மாணிக்ராவ் தாக்கரேவும் ஒருவர். “கனவு காணும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் உத்வேகமாக இருக்கிறார்” என்று பிவாண்டி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ரைஸ் ஷேக் பாராட்டியுள்ளார்.
பின்தங்கிய சமூகங்களுக்காக, குறிப்பாகப் பெண்களின் கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் பணியாற்றுவதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் அடிபா. “ஐஏஎஸ் ஒரு பொறுப்பு மற்றும் வாய்ப்பு. உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர இந்தப் பதவியைப் பயன்படுத்த விரும்புகிறேன்” என்கிறார். “தோல்விகள் முடிவல்ல. அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி பின்தொடரும்” என்று கூறி, சக ஆர்வலர்களுக்கு ஊக்கமளிக்கிறார்.
பொறுமை, விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி…! மகாராஷ்டிராவிலிருந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இஸ்லாமிய பெண்…

