Last Updated:
இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெதேல் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள்.
அணியின் ஸ்கோர் 97 ரன்கள் ஆக இருந்தபோது ஜேக்கப் 33 பந்துகளில் 2 சிக்ஸர் 8 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரைச்சதம் கடந்த விராட் கோலி 33 பந்துகளில் 5 சிக்சர் 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தேவ்தத் படிக்கல் 17 ரன்களும் பின்னர் வந்த ரஜத் படிதார் 11 ரன்களும் எடுத்தனர். ஜித்தேஷ் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி மூன்று ஓவர்களில் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பார்ட் வெறும் 14 பந்துகளில் 6 சிக்சர் 4 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 214 ரன்கள் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் ஷேக் ரசீத் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆல் ரவுண்டர் சாம் கரன் 5 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் இணைந்த ஜடேஜா, ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்த ஆயுஷ் மாத்ரே சதத்தை தவறவிட்டார்.
கடைசி ஓவரில் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டபோது அந்த ஓவரை யாஷ் தயாள் அற்புதமாக வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரவிந்திர ஜடேஜா 45 பந்துகளில் 2 சிக்சர் 8 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
May 03, 2025 11:40 PM IST


