Last Updated:
மஹாராஷ்ட்ரா பாஜக அமைச்சருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை போலீசார் புனேவில் கைது செய்தனர்.
மஹாராஷ்ட்ரா மாநில பாஜக அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு செல்போன் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-வுக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி ஆபாசமான வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதோடு பங்கஜா முண்டேயின் செல்போனுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளையும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களையும், ஆபாசமான சித்தரிக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத பங்கஜா முண்டே தொடர்ச்சியாக அந்த நபர் அத்துமீறி செயல்பட்டு வந்ததால் பா.ஜ.க அலுவலக சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் நிகில் பாம்ரேயிடம் புகார் அளித்தார். உடனே அவர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
செல்போன் மூலம் அத்துமீறிய நபரை அவரது செல்போன் நம்பரை வைத்தே போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். செல்போன் சிக்னல் குற்றவாளி புனேயில் இருப்பதாகக் காட்டியுள்ளது. அவரது இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்த மும்பை போலீசார் புனே போலீசாரின் துணையோடு அமோல் காலே என்ற 25 வயது நபரை பிடித்தனர்.
விசாரணையில் அமோல் காலே குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து போலீசார் மும்பைக்கு அழைத்து வந்தனர். புனேயில் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த நபரின் சொந்த ஊர் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்று விசாரணையில் தெரிய வந்தது. பங்கஜா முண்டேயின் சொந்த ஊரும் பார்லியாகும். இருப்பினும் என்ன காரணத்திற்காக இதுபோன்ற அத்துமீறினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


