Last Updated:
பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி, இஸ்லாமியர்களுக்கு அல்லது காஷ்மீர் மக்களுக்கு எதிராக செல்வதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ, காஷ்மீர் மக்களுக்கு எதிராகவோ மக்கள் செல்வதை விரும்பவில்லை என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகின்றது. அந்த விசாரணையில், மேலும் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
அதன்படி, அரு பள்ளத்தாக்கு, பீடாப் பள்ளத்தாக்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டதாகவும், ஆனால், அங்கு பாதுகாப்பு கெடுபிடி இருந்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பஹல்காமில் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும், அவர்களுக்கு 20 பேர் உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இதுவரை 186 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நர்வால் என்பவரும் பலியானார். அவரது பிறந்தநாளையொட்டி ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் மீதும், எந்த சமூகத்தின் மீதும் வெறுப்பு பரப்பப்படுவதை விரும்பவில்லை என்றார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ, காஷ்மீர் மக்களுக்கு எதிராகவோ மக்கள் செல்வதை விரும்பவில்லை என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி தெரிவித்துள்ளார். ஹனிமூன் சென்ற இடத்தில் கணவரை இழந்த நிலையிலும் அவர் இவ்வாறு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


