குறிப்பாக 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேசிய அளவில் காங்கிரசும், உத்தரப்பிரதேசத்தில் மாநில கட்சியான சமாஜ்வாதி கட்சியும் அரசு பதவிகளில் ஓபிசி மற்றும் தலித்களும் புறக்கணிக்கப்படுவதாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதேபோல், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றியும் தீவிரமாக பேசிவந்தனர். ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் தங்கள் கைகளில் அரசியல் அமைப்பு சட்டத்தின் நகலை ஏந்தியபடி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதுவெல்லாம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கண்ட சரிவுக்கு காரணமாக சொல்லப்பட்டது.
இந்தப் பின்னணியில் தற்போது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பிகார் தேர்தலிலும், 2027ல் நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேச தேர்தலிலும் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க பெரும் வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் எழுந்தன. இதனைக் கணக்கிட்டே மத்திய பாஜக அரசு தற்போது எதிர்க்கட்சிகள் அரசியலுக்கான இடத்தை கொடுக்காமல் சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெ.என்.யு.வின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவி குமார், “பாஜக தன் மீது வைக்கப்படும் அனைத்து அடையாளங்களும் நீக்க வேண்டும் என விரும்புகிறது. சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று, விவசாயகளுக்கு எதிரானது பாஜக எனும் அடையாளத்தை அழித்தது. அதேபோல், சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்து ஓபிசி மற்றும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக எனும் பிம்பத்தை நீக்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் இது குறித்து பேசும்போது, நாடு முழுக்கப் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அரசு பெரும் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்த்திருந்தபோது, நரேந்திர மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சிகள் எந்த பெருமையும் எடுத்துக்கொள்ள முடியாதபடி செய்துவிட்டது என்கின்றனர்.
இந்த அறிவிப்பு குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், “இது 100 சதவீதம் எங்களின் வெற்றி. பிச்டா, தலித், அல்ப்சங்க்யாக் – ஓபிசி, தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் ஒருங்கிணைத்த அழுத்தமே, அரசை இந்த அறிவிப்பை வெளியிட செய்தது. நேர்மையான சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அனைத்து சாதியினரும் தங்களின் வாய்ப்புகளைப் பெறமுடியும்” எனத் தெரிவித்தார்.
பாஜக வியூகவாதி ஒருவர், “சாதிவாரி கணக்கெடுப்பு தற்போது தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக இல்லை. ஆனால், இந்தத் திடீர் அறிவிப்பின் மூலம் கட்சி இதன் முழு உரிமையை பெறமுடியும். அதேபோல், பிகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரச்சாரம் இதன் மூலம் மழுங்கடிக்க முடியும். நிலுவையில் உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சனை, எதிர்க்கட்சிகள் பாஜகவை குறிவைத்து எளிதாகப் பேச வழிவகுத்திருக்கும்” என்கிறார்.
உத்தரப் பிரதேசம் பாஜகவின் ஓபிசி முகமாகவும், துணை முதலமைச்சராகவும் இருக்கும் கேஷவ் பிரசாத் மயூரா, “சமூகமாகவும், பொருளாதாரமாகவும் வலுவடைய இந்த அறிவிப்பு உதவும். முந்தைய காங்கிரஸ் அரசு, எடுத்த கணக்கெடுப்பில், எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் தொகையினை மட்டுமே பொதுவெளியில் அறிவித்தது. அவர்கள் ஓபிசி மற்றும் பிற சாதியினரின் தரவுகளை வெளியிடவில்லை. அது அநீதியானது” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி அரசின் இந்த அறிவிப்பு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெறும் பிகார் தேர்தல் மட்டுமின்றி 2027ல் நடைபெற இருக்கும் உத்தரப்பிரதேச தேர்தலிலும் இது பாஜகவுக்கு பெரும் உதவியாக இருக்கும். காரணம், சாதிவாரி கணக்கெடுப்பு தற்போது அறிவித்திருப்பதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் தேர்தலில் இது பெரும் பேசு பொருளாகவும், இதன் தரவுகள் சேகரித்து முடிவு அறிவிக்க எப்படியும் 2027ஆம் ஆண்டு ஆகும் எனும் அடிப்படையில், அந்த ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேச தேர்தலிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எதிர்க்கட்சி அரசியலுக்கு மோடி வைத்த செக்! பிகார், உ.பி. தேர்தல்களை அசைத்துப் பார்க்கப்போகும் சாதிவாரி கணக்கெடுப்பு

