Last Updated:
உத்தரப்பிரதேசம் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் புத்தக வெளியீட்டு விழாவில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
உத்தரப்பிரதேசம் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா இன்று உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், “நமது அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் என இரு உயர்ந்த பதவிகளை வழங்குகிறது. இந்த அலுவலகங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இத்தகைய கண்ணியமான பதவிகளைப் பற்றி கருத்து தெரிவிப்பது, என் பார்வையில் சிந்திக்க வேண்டியது.
ஒவ்வொரு அமைப்பிற்கும் அதற்கான பணிகள் என்பது தனித்துவமாக இருக்கிறது. ஒருவர் மற்றவரின் பணியை செய்யக்கூடாது. நாம் அரசியலமைப்பை மதிக்க வேண்டும். நீதித்துறை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வழக்கறிஞராக நீதித்துறையில் பணியாற்றினேன். நீதித்துறையில் மிகவும் திறமையானவர்கள் இருப்பதை நான் அறிவேன். நீதித்துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது ஜனநாயக அமைப்பு எவ்வளவு வலிமையானது என்பது நீதித்துறையின் அந்தஸ்தால் வரையறுக்கப்படுகிறது.
உலகளாவிய தரத்தின்படி, நமது நீதிபதிகள் சிறந்தவர்களில் ஒருவர். ஆனால் நாம் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பங்கேற்பு உணர்வைக் காட்ட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமன்றம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பொதுவாக நினைவாற்றல் குறைவு என்றும், காலப்போக்கில் எல்லாம் மறந்துவிடும் என்றும் மக்கள் சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. நாம் அவசரகாலத்தை மறந்தாவிட்டோம்?. எவ்வளவு காலம் கடந்தும், அவசரகாலத்தில் கருப்பு பக்கங்கள் இன்றும் நமக்கு தெரிகிறது. காரணமே இல்லாமல், மக்கள் சிறைப்படுத்தப்பட்டது, அடிப்படை உரிமைகள் மறுப்பு, நீதித்துறையை அணுகுவது தடுக்கப்பட்டது என இந்திய வரலாற்றில் அது மிகவும் கருப்பான பக்கங்கள். நாம் அதை எதையும் மறக்கவில்லை” எனப் பேசினார்.
தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. மேலும், மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடுவை விதித்தது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த உத்தரவு குறித்து முன்னரே பேசிய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றம், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுகிறதா? உச்சநீதிமன்றம் தமக்கான அதிகாரம் 142-வது பிரிவை அணு ஆயுத ஏவுகணையாக பயன்படுத்துகிறதா? என தனது கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக அமைப்பு நீதித்துறையின் அந்தஸ்தால் வரையறுக்கப்படுகிறது – குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர்


