கல்வி, செல்வம், வீரம் இந்த மூன்றுமே ரொம்பவும் முக்கியமானது. கல்வியுடன் கூடிய செல்வம் நற்காரியங்களுக்கு பயன்படக்கூடியது. ஞானமும், செல்வமும் ஒரு சேர ஒரு மனிதன் பெற்றுவிட்டால் அவனுக்கு பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும்? இதனை கொடுக்கக் கூடியவர் விநாயகர்! விநாயகருக்கு சதுர்த்தி விரதம் இருந்து வழிபட்டு வந்தால், நம் அறிவாற்றல் பெருகும் மேலும் செல்வமும் நம் அறிவாற்றல் மூலம் உயர்ந்து நிலைத்து நிற்கும். அதுமட்டுமல்லாமல் சங்கடங்களையும் இந்த விரதம் நிவர்த்தி செய்யும்.வியாழனுடன் சேர்ந்து வரக்கூடிய சித்திரை மாத சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு ஞானத்துடன் செல்வமும் பெருகி, சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து, நல்வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். நாளை விநாயகரை எப்படி வழிபட்டு ஞானமும், செல்வமும் பெறுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
சதுர்த்தி விரதம் கடைபிடிப்பவர்கள், தொடர்ந்து மாதம் இருமுறை வரக்கூடிய கிருஷ்ணபட்ச சதுர்த்தி மற்றும் சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை தவறாது கடைபிடிக்க வேண்டும். ஒருமுறை செய்து விட்டு பலனை எதிர்பார்ப்பது முறையானது அல்ல! ஒவ்வொரு சதுர்த்தி விரதம் அன்றும் அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தபத்தமாக விநாயகரை பூஜை அறையில் பிரதிஷ்டை செய்து அவருக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைக்க வேண்டும்.
மோதகம், சுண்டல் தயார் செய்து வைக்கலாம். எதுவும் முடியாவிட்டால் கற்கண்டு, பேரிச்சை போன்றவற்றை வைத்து படைத்து வழிபடலாம். விநாயகருக்கு அருகம்புல் ரொம்பவும் முக்கியம். அருகம்புல் வைத்து வழிபடும் பொழுது விநாயகருடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். எப்படியாவது அருகம்புல் கட்டு ஒன்றை வாங்கி வைத்து அதை மாலையாக கோர்த்து விநாயகருக்கு போடுங்கள். முடியாதவர்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலையை வாங்கி சாற்றி பிரார்த்தனை செய்து விட்டு வரலாம்.
எருக்கம் பூ மாலை கிடைத்தாலும் போடுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள். அன்றைய நாள் முழு விரதம் இருந்து உணவேதும் உண்ணாமல், விநாயகரை நினைத்து விநாயகர் அகவல், மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், கதைகள் போன்றவற்றை படித்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் பெரிதாக எதையும் எதிர்பார்க்காதவர். அகல் விளக்கு தீபம் போட்டு வழிபட்டு வந்தாலும், முழு மனதோடு ஏற்றுக்கொள்வார்.
தொழிலில் இருக்கும் தடைகளை நீக்கி, ஞானம் பெருகி, செல்வம் வளர்ந்து, சங்கடங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெற மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மாலையில் கண்டிப்பாக விநாயகர் சென்று தரிசனம் செய்துவிட்டு பின்னர் விரதத்தை முடித்து, விநாயகருக்கு படைத்த நைவேத்திய பிரசாதங்களை எடுத்துக் கொள்ளலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்கள் போன்ற சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம்.
விரதம் இருக்கும் பொழுது கூடுமானவரை சத்தமாக பேசக்கூடாது, கோபப்படக்கூடாது, சாந்தமான மனநிலையுடன், முழு பக்தியுடன், விநாயகரை மனதில் நிறுத்தி சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா நற்பலன்களும் நிச்சயமாக கிடைக்கும். தொடர்ந்து 21 சதுர்த்தி விரதங்கள் இம்முறையில் இருந்து வாருங்கள் நினைத்தது நடக்கும்.
The post வியாழன் சதுர்த்தி விரதம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

