26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு அதன் வான்வெளியையும் மூடியுள்ளது. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் நம்புகிறது. ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானுக்கு கிடைக்கும் விமான வருவாயில் மில்லியன் கணக்கான டாலர்களை இழக்க வழிவகுக்கும்.
ஒரு நாட்டின் வான்வெளியைக் கடக்கும் விமானங்களுக்கு வசூலிக்கப்படும் விமானக் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் பணம், இதனால் குறைய வாய்ப்புள்ளது. மேலும், இந்திய விமானங்கள் இப்போது, பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்து நீண்ட பாதையில் செல்கின்றன.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், சமூக ஊடகங்களில் இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தானின் வான்வெளியை தவிர்த்து, நீண்ட பாதையில் செல்வதைக் காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது பதிவிற்கு பதிலளித்த நரேன் மேனன் என்கிற பயனர், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் நிதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டினார். “உலகின் மூன்றாவது பெரிய (மற்றும் வேகமாக வளர்ந்து வரும்) விமானச் சந்தையிலிருந்து பாகிஸ்தான் ‘வான்வெளிக்கான கட்டணங்களை’ இழக்கிறது. இதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும். மனிதகுல வரலாற்றில் இவ்வளவு கூட்டு முட்டாள்தனத்தை எந்தவொரு நாட்டிலும் பார்த்ததில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
சில யூசர்கள், வெளிநாட்டு விமான நிறுவனங்களிடமிருந்து பாகிஸ்தான் எப்படியும் சம்பாதிக்கும் என்று கூறினர். இருப்பினும், இந்தியாவில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பெரும்பாலான விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன என்பதை நரேன் மேனன் தெளிவுபடுத்தினார். எனவே, பாகிஸ்தான் அதன் ஓவர்ஃப்ளைட் கட்டண வருமானத்தில் பெரும் பகுதியை இழக்க நேரிடும்.
இதன்மூலம், ஏற்கனவே திவாலான பாகிஸ்தான், இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தன்னைத்தானே சிக்கவைத்துக் கொள்வது போலத் தெரிகிறது என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லும் விமானங்களுக்கான பயண நேரம் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் அதிகரிக்கும், இதன் விளைவாக அதிக எரிபொருள் நுகர்வு, நீட்டிக்கப்பட்ட பணியாளர் நேரம் மற்றும் தவிர்க்க முடியாத தாமதங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மூத்த விமானி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முன்பு ஜூலை 2019 இல், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடிய போது கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
April 30, 2025 9:00 PM IST

