1991-ம் ஆண்டு, ஜூகலின் நண்பர் ஒருவர் அவருக்காக ஒரு கேக் செய்யுமாறு கேட்டுள்ளார். ஏனென்றால் கேக் செய்வதில் அப்போதே ஜூகல் நிபுணராக இருந்தார். கேக் குறித்து அவருடைய நண்பரின் சிறிய பாராட்டு, சிறப்பான ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் ஆர்வத்தையும் ஜூகலிடம் விதைத்தது. இதையடுத்து தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த ஜூகல், ரூ.50,000 முதலீட்டில் தனது சொந்த ஊரில் ஒரு பேக்கரியைத் திறந்தார். டெல்லி-என்.சி.ஆர் தவிர வேறு இரண்டு மாநிலங்களிலும் தனது பேக்கரியின் தயாரிப்புகளை வழங்குகிறார் ஜூகல். இருப்பினும், ஒரு ஆசிரியராக இருந்துவிட்டு பேக்கரி உரிமையாளராக பயணம் செய்தது எளிதானது அல்ல. அவரது வெற்றிக் கதை மிக நீண்டது.
ஜுகல் கிஷோர் தனது பேக்கரியை எவ்வாறு தொடங்கினார்?
ஜுகல் கிஷோர், பைகுந்த் நகர் குருத்வாராவில் உள்ள குரு கோவிந்த் சிங் பள்ளியில் ஆசிரியராகவும், அலிகரில் உள்ள குவார்சி பைபாஸில் உள்ள ஆனந்த் விஹார் காலனியில் வசித்தும் வந்தார். அவரது மகன் ராகவேந்திர சிங் 1991-ல் பிறந்தார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து, அதாவது சரியாக 1992-ல் ‘கிருஷ்ணா பிஸ்கட் பேக்கரி’ என்ற தனது பேக்கரியைத் தொடங்கினார் ஜூகல்.
வீட்டிலேயே சொந்தமாக பேக்கரி தொடங்குவதற்கு அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆதரவளித்தனர். இருப்பினும், ஜுகல் கிஷோர் தனது வேலையை விடாமல் இருந்ததால், ஆசிரியர் வேலைக்கும் சொந்தமாக தொழில் நடத்துவதற்கும் இடையில் சமநிலைப்படுத்துவது கடினமாக இருந்தது. ஆனால் அவர் நம்பிக்கையுடன் இருந்ததோடு இரண்டு வேலைகளையும் ஒருசேர சமாளித்தார். ஒன்று தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காகவும் மற்றொன்று பேக்கரி மீதான அவரது ஆர்வத்திற்காகவும் எனத் தனித்தனியே பிரித்துக்கொண்டார்.
கடுமையான உழைப்புக்குப் பிறகு, அவரது பேக்கரி கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அவர் தனது பேக்கரி பொருட்களை அண்டை பகுதிகளான ஹத்ராஸ், புலந்த்ஷஹர், மெயின்புரி, ஃபிரோசாபாத் மற்றும் பரேலி போன்றவற்றுக்கு விற்கத் தொடங்கினார். இன்று பேக்கரியின் வருவாய் ரூ.5 கோடியாக உள்ளது. 2013-ம் ஆண்டில் அவரது மகன் ராகவேந்திரன் டி.எஸ் கல்லூரியில் பி.காம் பட்டம் முடித்த பிறகு, தனது தந்தையின் தொழிலை விரிவுப்படுத்த பேக்கரியில் வேலை செய்யத் தொடங்கினார்.
இதற்கிடையில் 2018-ம் ஆண்டில் அலிகரின் தலநகரியில் ‘ரித்திமா ஃபுட்ஸ்’ என்ற பெயரில் புதிய தொழிற்சாலையை இவர்கள் குடும்பம் திறந்தபோது பேக்கரியின் வணிகம் மேலும் வளர்ந்தது. இந்தப் புதிய முயற்சி ஜுகல் கிஷோரின் பேக்கரி மீதான ஆர்வத்தை மேலும் விரிவுப்படுத்தியது. ரித்திமா ஃபுட்ஸ் ரஸ்க், பிஸ்கட், ரொட்டி, கேக் போன்ற பேக்கரி பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
ரித்திமா ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராகவேந்திரா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற அண்டை மாநிலங்களில் தங்கள் பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதே தனது நோக்கம் என்று கூறுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 28, 2025 6:39 PM IST

