அமெரிக்காவும், உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியில் முடிய வேண்டும் என்று மல்லுக்கட்டி கொண்டிருக்க, ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடர்ந்துகொண்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “கீவ் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை. இது தேவையில்லாதது மற்றும் மிக தவறான நேரம் இது. நிறுத்துங்கள்! ஒவ்வொரு வாரமும் 5,000 வீரர்கள் இறக்கிறார்கள். அமைதி ஒப்பந்தத்தை முடிப்போம்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை, போப் ஆண்டவர் இறுதி ஊர்வலத்தில் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர். இதனையடுத்து தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப், “புதினுக்கு போரை நிறுத்த வேண்டாம் போலும். பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள்” என்று கடுமையாக சாடியிருந்தார்.
நேற்றும் கூட, உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் ‘உக்ரைன் தொடர் தோல்விகளை சந்திக்கும்’ என்றும் எச்சரித்துள்ளது ரஷ்யா.
இதிலேயே ட்ரம்ப் கூறியது உறுதியாகி விட்டது. அதாவது, போர் நிறுத்தத்தை புதின் விரும்பவில்லை என்பது.
உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா என்னவாகும்?
இந்தப் போர் முடியாதது உக்ரைனுக்கு பெரும் பாதிப்பு. ரஷ்யாவை விட, சிறிய நாடான உக்ரைன் தன் சக்திக்கு மீறி, பிற நாடுகளின் உதவியுடன் போரிட்டு வருகிறது. இதில் முக்கியமானது அமெரிக்காவின் ஆதரவு. ட்ரம்ப் இந்த ஆதரவை தொடர விரும்பவில்லை. அதனால், இந்தப் போர் நீடித்தால் உக்ரைன் கடும் பாதிப்படையும்.
ஏற்கெனவே பல நாடுகளின் கெடுபிடிகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் தள்ளாடி வருகிறது. இன்னும் இதைத் தொடர்ந்தால், ரஷ்யா நிச்சயம் தடுமாறும்.
மேலும், ட்ரம்ப் ரஷ்யாவின் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற ஒரு சின்ன துப்பை கொடுத்துள்ளார். இதுவும் நடந்தால் நிச்சயம் ரஷ்யாவின் நிலைமை மோசம் தான்.
ட்ரம்ப் தான் சொல்லியதை நடத்தி காட்ட வேண்டும் என்கிற அணுகுமுறையை கொண்டவர். இதனால், அவர் போருக்கு உதவி செய்தாலும், புதின் உடனான தனது நட்பை கெடுத்துகொள்வார். போரை விட்டு விலகினாலும், ‘உக்ரைன் அமெரிக்காவால் பாதிக்கப்படுகிறது’ என்ற பெயரை சம்பாதிப்பார். ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் விஷயத்தில் இந்தப் பெயரை அமெரிக்கா சம்பாதித்தது.
இந்த முக்கோண நிலைமை எதில் போய் முடிவடையும் என்பது அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள் கைகளில் தான் உள்ளது.

