Last Updated:
ஈரானில் ஷஹித் ராஜேய் துறைமுகத்தில் சீனாவில் இருந்து வந்த ரசாயன கண்டெய்னர்கள் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை தற்போது மேலும் உயர்ந்துள்ளது.
ஈரானில் உள்ள துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்த நிலையில், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர விபத்து நடந்தது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஈரானில் நிகழ்ந்த இந்த பயங்கர வெடி விபத்து உலகையே அதிரச் செய்துள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஷஹித் ராஜேய் துறைமுகம் ஆண்டுக்கு 80 மில்லியன் டன் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பெரிய அளவில் செயல்படுகிறது. அந்நாட்டின் எண்ணெய் சார்ந்த ஏற்றுமதியில் 20 விழுக்காடு வர்த்தகம் இந்த துறைமுகம் வழியாகவே நடைபெறுகிறது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறைமுகத்தில், ஆயுதங்கள் தயாரிக்க தேவைப்படும் ரசாயன மூலப்பொருட்களை ஏற்றி, இறக்கும் பணிகள் நடைபெற்றன. குறிப்பாக, ஏவுகணைகளில் உந்துசக்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கையாளப்பட்டதாக கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து ரசாயனங்களுடன் வந்த இரண்டு பெரிய கண்டெய்னர்களை இறக்கி வைக்கும் போது, எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நேரிட்டது. முதலில் இளஞ்சிவப்பு நிரத்தில் புகை வெளியேறி, பின்னர் பலத்த சத்தத்துடன் கண்டெய்னர்கள் வெடித்து சிதறின.
இந்த பயங்கர வெடி விபத்தின் அதிர்வால், ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த வீடுகள், கட்டடங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின. வெடிவிபத்தின் தாக்கம் துறைமுகத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்தால் துறைமுக கட்டடங்களும் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஈரானிய கடற்படை தளத்துக்கு அருகிலேயே நிகழ்ந்த இந்த விபத்தால் பரபரப்பு நிலவியது.
இந்த வெடிவிபத்தின்போது, எண்ணெய் சார்ந்த எந்த கட்டமைப்பும் பாதிக்கப்படவில்லை என்றும், விபத்து நடந்தது எப்படி என விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஈரானின் அதிபர் மசவுத் பெஷேஷ்கியான் அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 27, 2025 10:28 AM IST
ஈரானில் துறைமுக வெடி விபத்தில் 14 பேர் பலி; 700-க்கும் மேற்பட்டோர் காயம் : கோர விபத்து நடந்தது எப்படி?


