Last Updated:
Pope Francis: போப் என்பவர் தொட முடியாத அளவிற்கு எட்டிப் பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தில் இருப்பார் என்கின்ற தோற்றம் இருக்கும். ஆனால் பிரான்சிஸ் அதனை மொத்தமாக உடைத்தார்.
உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் என அறியப்படுகிறார். 2013ஆம் ஆண்டு போப் பதவியிலிருந்து 26வது பெனடிக்ட் விலகியதைத் தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார்.
2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராகப் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். தற்போது இவர் மறைவை அடுத்து உலகெங்கிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட இந்திய அரசாங்கம் போப் ஆண்டவர் மறைவிற்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்தது.
பொதுவாக போப் ஆண்டவர்கள் மிகுந்த பாதுகாப்புடனும் வளமிக்க வாழ்வுடனும் வாழ்ந்து வருவார்கள் என அறியப்படுகிறது. ஆனால் இதிலிருந்து போப் பிரான்சிஸ் அவர்கள் முற்றிலுமாக மாறுபட்டு எளிய வாழ்வையே வாழ்ந்து வந்தார்.
இதையும் படிங்க: அடுத்த போப் ஆண்டவர் யார்… புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை என்ன..?
அவரது எளிமையான வாழ்வு குறித்து சுவாரஸ்யத் தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தேவசகாய மவுண்ட் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு தந்தை லியோன் டென்சன், “திருத்தந்தை பிரான்சிஸ் சாதாரண நிலையை எப்பொழுதும் தன் வசப்படுத்திக் கொண்டவர்.
ரோமிற்கு இருக்கக்கூடிய அதிகாரம் அதிலும் குறிப்பாக வாடிகனில் இருக்கக்கூடிய கட்டமைப்புகள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது நமக்கு ஆச்சரியமாக இருக்கும் பிரமிப்பாகவும் இருக்கும். ஒருவகையில் பார்த்தால் திருத்தந்தை என்பவர் தொட முடியாத அளவிற்கு எட்டிப் பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தில் இருப்பார் என்கின்ற தோற்றம் இருக்கும். ஏற்கனவே இருந்த திருத்தந்தையர்கள் வரலாற்றில் அப்படி இருந்தார்கள் என்பது தான் உண்மை.
சிலர் தரையிறங்கிச் செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் திருத்தந்தை பிரான்சிஸ் ஒட்டுமொத்தமாக அந்த கட்டமைப்பை உடைத்து பணிகள் செய்தவர். ஏனென்றால் ஏழைகள் மீது அவர் கொண்ட அக்கறை. ஏற்கனவே இருந்த போப் ஆண்டவர்கள் போல் இல்லாமல் மாளிகை அரண்மனை வாழ்க்கை எல்லாம் தவிர்த்து சாதாரண இல்லத்தில் அவர் குடியிருந்தார். இன்னும் சொல்லப்போனால் கொரோனா காலங்களில் வீதிகளில் அவர் உலா வந்து ஏழை எளிய மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டார்.
இதையும் படிங்க: Catholic Church: ரோம் முதல் குமரி வரை… கத்தோலிக்க திருச்சபைகளின் செயல்பாடுகள் பற்றித் தெரியுமா…
மேலும் போர் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் தாமாக முன் வந்து செல்வது, பசி பட்டினி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று ஏழை எளிய மக்களிடம் உரையாடியது இதெல்லாம் அவருக்கே உரிய தனி பாங்கு, தனித்துவம் என்பது உண்மை” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 26, 2025 4:20 PM IST

