ஈப்போ :
JB சென்ட்ரலுக்கு செல்லும் தெற்குப் பாதைக்கான மின்சார ரயில் சேவையில் (ETS3) இரண்டு மின்சார ரயில்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இயங்கத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அவை மின்சார மல்டிபிள் யூனிட் (EMU) பெட்டிகள், டைனமிக் மற்றும் தவறு இல்லாத சோதனை உள்ளிட்ட தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“அனைத்து சோதனைகளும் சீராக நடந்தால், ஆகஸ்ட் மாதத்திற்குள் ரயில்கள் இயக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“முதல் இரண்டு பெட்டிகளைத் தவிர, மீதமுள்ள எட்டு பெட்டிகளும் பத்து கஜாவில் உள்ள சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன் (CRRC) ஆலையில் கட்டம் கட்டமாக இணைக்கப்படுகின்றன.
“நாட்டின் ரயில் சேவை திறனை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 10 பெட்டிகளும் முடிக்கப்பட்டு, இந்த மிசார ரயில்கள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் முன்னதாக பத்து கஜாவில் உள்ள KTMB டிப்போவை பார்வையிட்ட பின்னர், மேற்கூறியவாறு கருத்து தெரிவித்தார்.


