Last Updated:
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவத்தினர் தீவிர வேட்டையில் இறங்கினர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு ராணுவ தலைமை தளபதி சென்ற நிலையில், அம்மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பிறகு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, ஸ்ரீநகருக்குச் சென்றுள்ளார். பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில், எல்லையின் சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியப் படைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு இந்திய தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டுள்ளது. பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதே போன்று, குல்நார் பஷிபோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவத்தினர் தீவிர வேட்டையில் இறங்கினர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கடந்த 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் நுழைந்த 4 பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்தியர்கள் 25 பேர், நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்தத் தாக்குதலை அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த ஆதில் தோகர் என்பவரும், திரால் பகுதியைச் சேர்ந்த ஆசிஃப் ஷேக்கும் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருவரில் ஆதில் தோகர் கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் -இ- தொய்பா அமைப்பில் ஆயுதப்பயிற்சி பெற்றவராவார். இந்த நிலையில் திரால் மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
April 25, 2025 5:32 PM IST


