Last Updated:
துலா ராம் 9 பெண்களை திருமணம் செய்து, அவர்களை மோசமான முறையில் கொடுமை செய்து அடித்து துன்புறுத்தி உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் காய்ந்த சருகுகளுக்கு அடியில் அழுகிக் கொண்டிருந்த நிலையில் ஒரு பிணம் கண்டுபிடிக்கப்பட்டு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுலேஷா கிராமத்தை சேர்ந்த துலா ராம் என்ற 38 வயது நபர் மீது இது சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. முதலில் மோசமாக அழுகி பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பிணம் இருப்பதாக உள்ளூர் கிராமவாசிகள் கூறவே போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். பிறகு அந்த பிணம் 35 வயதான பசாந்தி பாய் என்று உறுதி செய்யப்பட்டது. பல நாட்களாக அந்த பிணம் அங்கு இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அப்பெண்ணின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைகளுக்கு பின் போலீசார் துலா ராமை கைது செய்துள்ளனர். விசாரணையின் போது துலா ராம் தன்னுடைய மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டு உள்ளார். ஆரம்பகட்ட விசாரணையில், சமீபத்தில் தாங்கள் இருவரும் தம்பதியராக ஒரு திருமணத்திற்கு சென்றதாகவும் அங்கு தன்னுடைய மனைவி அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் புடவை போன்ற பொருட்களை திருடியதாகவும், இதனை அறிந்து அவர் தன்னுடைய மனைவியை கண்டித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றி அவரை கொன்று விட்டதாக துலாம் ராம் கூறுகிறார்.
அதன் பிறகு தன்னுடைய மனைவியின் பிணத்தை அருகில் இருந்த காட்டிற்கு இழுத்துச் சென்று, சருகுகளுக்கு அடியில் தீ வைத்து கொளுத்தி விட்டால் யாருக்கும் தெரியாது என்று நினைத்து செய்ததாக துலா ராம் கூறியுள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிணம் அழுகி அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதன் பிறகு தான் துலா ராம் மாட்டிக் கொண்டுள்ளார். ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் பசாந்தி பாய் துலா ராமின் முதல் மனைவி கிடையாது. அவர் அவருடைய பத்தாவது மனைவி ஆவார்.
இதற்கு முன்பு துலா ராம் 9 பெண்களை திருமணம் செய்து, அவர்களை மோசமான முறையில் கொடுமை செய்து அடித்து துன்புறுத்தி உள்ளார். தொடர்ந்து இம்மாதிரியான சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ள துலா ராம் பற்றி போலீசாருக்கு தெரியாமல் இருந்துள்ளது. இதனால் அவர் அடுத்தடுத்து திருமணம் செய்து இருக்கிறார். மற்ற மனைவிகளை போல பசாந்தியும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்தினால் தான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக அவர் கூறுகிறார்.
இதனை அடுத்து துலா ராமுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு சமூக-பொருளாதார அழுத்தங்கள் இருப்பதும், கிராமத்திற்குள் தனித்து இருந்ததன் காரணமாகவும் அவர் இப்படி மாறி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். மேலும் இதற்கு முன்பு துலா ராம் செய்த திருமணத்தின் போது மறைக்கப்பட்ட குற்றங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இப்படி ஒரு கொடுமைக்காரராக இருந்தும் கூட தொடர்ச்சியாக துலா ராம் எப்படி அடுத்தடுத்து திருமணத்தை செய்துள்ளார் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
April 23, 2025 10:40 PM IST
9 மனைவிகளுக்கு டார்ச்சர்… 10 ஆவது மனைவியை அடித்தே கொன்று தீ வைத்து எரித்த நபர் – அதிர்ச்சி சம்பவம்


