Last Updated:
ஒரு கிராம் தங்கம் விலை மிகவிரைவில் 10 ஆயிரம் ரூபாயை எட்டும் என பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார்.
வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இது விரைவில் பத்தாயிரம் ரூபாயை எட்டும் என வல்லுநர்கள் கணித்துள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
முன்பெல்லாம் தங்க நகைகளை வாங்குவது மட்டுமே கடினமாக இருந்த நிலையில், தற்போது தங்கம் விலையை கேட்டாலே கண்ணைக் கட்டும் அளவுக்கு, தங்கத்தின் விலை ராக்கெட்டை விட வேகமாக கிடுகிடுவென உயர்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த 13 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலையில் 24 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, தற்போது சவரனுக்கு 72 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரம் ரூபாயை தொட 6 மாதங்களையே எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்த ஐந்தே மாதங்களில் கிராம் தங்கத்தின் விலை 8 ஆயிரம் ரூபாயை எட்டியது. அதன் பின்னர், மின்னல் வேகத்தில் அதிகரித்து, இரண்டே மாதங்களில் ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
தமிழ் மக்களின் கலாசாரத்தில் பின்னிப்பிணைந்த தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விறுவிறுவென உயர்வதால் மக்கள் பதறுகின்றனர்.
விலையைப் பார்த்து தயங்கும் மக்கள், 22 காரட் தங்கத்தை விடுத்து, சற்று உலோகக் கலப்புடன் கிடைக்கும் 18 காரட் தங்க நகைகளை வாங்கலாம் என தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறியுள்ளார்.
“உலகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான பதற்றம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை மேலும் 15 சதவிகிதம் உயர வாய்ப்பிருக்கிறது. அதன்படி ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை மிகவிரைவில் 10 ஆயிரம் ரூபாயை எட்டும்” என பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார்.
விலை அதிகமாக இருந்தாலும் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களுக்கு வருங்காலத்தில் லாபம் கிடைக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 22, 2025 9:43 AM IST
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாயை எட்டும்… பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு


