நேற்று (20.04.2025) மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 10ஆவது இடத்தில் இருந்தது. மேலும் அடுத்து வரவிருந்த 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற சூழலில் இருந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, அடுத்து உள்ள 6 போட்டியிலும் வென்றாக வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு, தோனி கூறியதாவது, “இனி ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம். சில போட்டிகளில் நாங்கள் இழந்தாலும், அடுத்த ஆண்டுக்கான சரியான காம்பினேஷன் அமைப்பது எங்களுக்கு முக்கியம். அதிகமாக வீரர்கள் மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த சீசனில் தகுதி பெற முயற்சிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்த சீசனில் தகுதி பெறமுடியவில்லை என்றால், அடுத்த ஆண்டு சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து வலுவாகத் திரும்புவோம்.
நாம் நல்ல கிரிக்கெட் விளையாடினால் வெற்றி பெறுவோம். அதே நேரத்தில், நாம் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், அதைப் பற்றி அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது, ஆனால் அதே நேரத்தில், நடைமுறைக்கு ஏற்றவராக இருக்க வேண்டும். 2020ஆம் ஆண்டு எங்களுக்கு சிறப்பாக இல்லை. அதேபோல தான் இதுவும்.
ஆனால் நாம் சரியான வடிவத்தில் கிரிக்கெட் விளையாடுகிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். முயற்சி செய்து, பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தும் அளவிற்கு தேவையான ரன்களை எடுக்கிறோமா என்பதை தான் பார்க்க வேண்டும். அவைதான் எங்களுக்குள்ள கேள்விக்குறிகள். சில கேட்சுகளை நாங்கள் தவரவிடுகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிக்க: இனியும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? சிஎஸ்கே-வுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
மேலும் ஆயுஷ் மாத்ரே குறித்து தோனி குறிப்பிடும்போது, “ஒரு இளைஞராக அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நான் நினைக்கிறேன். உங்கள் ஷாட்களை விளையாடும் நேரத்தில் உங்களுடைய பலம் என்ன என்பதை தெரிந்து விளையாட வேண்டும். அவர் தொடக்கத்திலிருந்தே தனது ஷாட்களை விளையாட விரும்பினார். நாங்கள் அவரை அதிகம் பார்த்ததில்லை, எனவே இது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இப்படி அவர்கள் பலத்திற்கு ஏற்ப, ஷாட்களை தொடர்ந்து விளையாடினால், அது மிடில் ஆர்டர் மற்றும் அதற்கு கீழ் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு எளிதாகிவிடும்” என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
April 21, 2025 12:05 PM IST

