Last Updated:
சிஎஸ்கே 8 ஐபிஎல் போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் காயம் காரணமாக விலகியதால் தோனி மீண்டும் கேப்டனாகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 4 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. 6 ஆவது முறையாக சிஎஸ்கே கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்காவது தகுதி பெறுவார்களா என்று பரிதவித்து வருகின்றனர். புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் 18 ஆவது சீசனில் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய உடன் சிஎஸ்கே மற்றும் தோனியை புகழ்ந்து பல ரீல்ஸ் மற்றும் மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் பறந்த வண்ணம் இருந்தன. “நீ பொட்டு வச்ச தங்க ரதம்” என தோனியை ஒரு பக்கம் ரசிகர்கள் புகழ மறுபக்கம் எங்கள தாண்டி கோப்பையை தொடுங்கடா என சிஎஸ்கேவிற்கு புகழ் பாடி வந்தனர் ரசிகர்கள். அடுத்த போட்டியில் ஆர்சிபி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை எளிதாக வெல்ல, அடுத்தடுத்த போட்டிகளும் சிஎஸ்கேவிற்கு தொடர் தோல்வியாக அமைந்தது.
சிஎஸ்கேவின் மந்தமான பேட்டிங், ஆக்ரோஷம் இல்லாத பவுலிங், ஃப்லடிங்கில் கோட்டை என அனைத்திலும் சொதப்பியது. சிஎஸ்கே தோல்விகளால் தத்தளித்து கொண்டிருக்கும் போது ரசிகர்களுக்கு அடுத்த பேரியடியாக செய்தி வெளியானது. காயம் காரணமாக கேப்டன் ருத்துராஜ் தொடரிலிருந்து விலகிவிட்டார் என்பது தான். இதையடுத்து மீண்டும் கேப்டன்ஷிப் தோனிக்கு மாற்றம் செய்யப்படுவதாக சிஎஸ்கே அறிவித்தது.
இதையடுத்து கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக தோனி களமிறங்கினார். “கண்ணாடியை திருப்பினால் மட்டும் வண்டி ஸ்டார்ட் ஆகி விடுமா” என்ற கதை போல் கேப்டனாக தோனி வந்தால் மட்டும் சிஎஸ்கே வெற்றி பெறுமா என்பது போல் தான் இருந்தது அந்த போட்டி. அதுவரை கொஞ்சமாவது சிஎஸ்கே டஃப் கொடுத்தது. ஆனால் கேகேஆர் போட்டியில் சிஎஸ்கே முழுவதுமாக சரணடைந்து விட்டது. பத்தே ஓவர்களில் ஆட்டத்தை முடித்து கேகேஆர் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் லக்னோவை சிஎஸ்கே வெற்றி பெற்றாலும் 166 ரன்கள் இலக்கை கடைசி ஓவர் வரை இழு இழுவென இழுத்து சென்றது. தற்போது மும்பை அணியிடம் மீண்டும் படுதோல்வி என புள்ளிப்பட்டியலின் பாதளத்தில் இருக்கிறது சிஎஸ்கே. இதுவரை 8 போட்டிகளிலில் விளையாடி உள்ள சிஎஸ்கே 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 5 அணிகள் ஏற்கனவே 10 புள்ளிகளை பெற்றுள்ளதால் 16 புள்ளிகள் பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகம். இல்லையென்றால் நீயா? நானா? என்ற சண்டை கடைசி வரை இருக்கும்.
கடந்த ஐபிஎல் சீசனில் இதே நிலையில் இருந்த ஆர்சிபி கடைசி 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. ப்ளே ஆஃப் சுற்றில் வழக்கம் போல் தோல்வி கண்டு 17வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அதே போல் சிஎஸ்கே அணிக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா என்ற முறையில் தான் இருக்கும். இல்லையென்றால் சிஎஸ்கே தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை அடியோடு தவறவிடும் சூழல் தான் அதிகம் உள்ளது.
April 21, 2025 6:29 PM IST


