Last Updated:
ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததை பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது. ராகுல் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரிடம் தேர்தல் முறைகளில் குறைகள் உள்ளதாக குற்றம்சாட்டினார்.
தேர்தல் முறைகளில் உள்ள குறைகள் பற்றி தெரிந்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் சமரசமாக செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப் பயணத்தின் ஒரு நிகழ்ச்சியாக பாஸ்டனில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். நேற்று (20ஆம் தேதி) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் வாக்களித்தனர். மாநிலத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் மாலை 5:30 மணியளவில் ஒரு புள்ளிவிவரத்தை எங்களுக்கு வழங்கியது. அதன் இரண்டு மணி நேர இடைவெளி அளவில் அதாவது இரவு 7:30 மணியளவில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இது சாத்தியமற்றது.
தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது, அந்த அமைப்பில் ஏதோ தவறு உள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை கேட்டபோது தேர்தல் ஆணையம் தரவில்லை. மாறாக வீடியோ ஆதாரமே கேட்கக்கூடாது என்று விதிகளை மாற்றிவிட்டது” என பேசியிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பாஜகவினர் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்துவருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை ராகுல்காந்தி விமர்சித்திருப்பதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி ஒரு துரோகி என்று விமர்சித்துள்ள சம்பித் பத்ரா, ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு சென்று இந்திய நிறுவனங்கள், இந்திய அமைப்புகள் பற்றி தொடர்ந்து இழிவாக பேசிவருவதாகவும் சாடியுள்ளார்.
April 21, 2025 6:27 PM IST


