Last Updated:
ஐபிஎல் தொடரின் 36வது போட்டி சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஐபிஎல் வரலாற்றின் இளம் வீரர் என்ற சாதனையோடு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு எதிரணியை கலங்கடித்தார். யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றபோது, பதினான்கே வயதான வைபவ் சூர்யவன்ஷியை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அப்போதே, “யார்ரா இந்த பையன்…?” என்ற கேள்வியோடு, மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பற்றிக் கொண்டது. பிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள சமஸ்திபூரைச் சேர்ந்த சூர்யவன்ஷி, 12 வயது 284 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். இதன் மூலம் ரஞ்சி கோப்பையில் மிக சிறிய வயதில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
முன்னதாக யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களிலும், சச்சின் 15 வயது 230 நாட்களிலும் அறிமுகமாகியிருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் தொடரில் அவர் 62 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து, அதிவேக சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இவற்றின் காரணமாகத்தான் அவருக்கு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 36வது போட்டி சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த லக்னோ அணி 180 ரன்கள் அடித்த நிலையில், ராஜஸ்தான் அணியில் இம்பேக்ட் வீரர்கள் லிஸ்டில் இருந்த சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் இல்லாததால் ஓபனராக களம் இறங்கினார்.
Also Read | உலகின் பணக்காரப் பேரரசி யார் தெரியுமா? இவர் இரக்கமற்ற ராணி என மக்களால் கூறப்படுகிறார்!
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 14 வயதில் களம் இறங்கிய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி, முதல் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திரையில் சிக்சருக்கு பறக்கவிட்டு எதிரணியை சற்று நேரத்தில் கலங்கடித்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
இதனால் சோகம் அடைந்த வைபவ் திடீரென கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார். அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர். போட்டியின் முடிவில், லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் லக்னோ வசமாகி இருந்தாலும், டாக் ஆஃப் தி டவுன் வைபவ் சூர்யவன்ஷிதான்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 20, 2025 3:38 PM IST


