Last Updated:
கோவையில் தங்கம் விலை உயர்வால் அட்சய திருதியை காலத்தில் நகை பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அட்சய திருதியைக்கு இன்னும் சில தினங்களே இருந்தாலும், ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலையால், போதிய ஆர்டர்கள் கிடைக்காமல் நகை பட்டறைகள் வெறிச்சோடி உள்ளன.
தங்க நகை தொழிலில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக விளங்குகிறது கோவை. மும்பைக்கு அடுத்தபடியாக கோவை தங்கநகை பட்டறைகளில் தயாராகும் தங்க நகைகளுக்கு இந்திய அளவில் நல்ல மதிப்பு உண்டு. கோவையில் ஆயிரக்கணக்கான தங்க நகைபட்டறைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வழக்கமாக அட்சய திருதியை காலங்களில் இந்த தங்க நகைக்கூடங்களில் இரவு பகலாக தங்க நகைகள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு போதிய ஆர்டர்கள் இல்லாமல் தங்க நகை பட்டறைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் போதிய வேலை வாய்ப்பு கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர். ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை காரணமாகவே ஆர்டர்கள் குறைந்துள்ளதாக தங்க நகை பட்டறை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுக்கும்போது ஒரு விலையாகவும், நகையை செய்து கொடுப்பதற்குள் விலை உயர்ந்து மற்றொரு விலையாகவும், மாறி விடுவதால் ஆர்டர் எடுக்கவே முடியாத நிலை இருப்பதாகவும் பட்டறை உரிமையாளர்கள் கூறுகின்றனர். வெளி மாநில ஆர்டர்களும் குறைந்து போனதாக கூறும் அவர்கள், அட்சய திருதியை ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்க நகைத் தொழிலில் வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தொழிலாளர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது தங்க நகை விலை ஏற்றத்தால் மேலும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: போஸ்ட் ஆபீஸ்ல இந்த சேமிப்பு திட்டத்தை பத்தி தெரியுமா? பல லட்சம் சம்பாதிக்கலாம்…
ஜொலிக்கும் தங்க நகைகளை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை ஜொலிக்காததால், அவர்கள் வேறு தொழிலை நோக்கி நகர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 50 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, ஒரே ஆண்டில் 70 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை கடக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், தங்க நகை பட்டறை தொழில் கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது.
இதனை காப்பாற்ற மத்திய – மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டுமென்பதே, தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
April 20, 2025 12:55 PM IST
Gold | நெருங்கும் அட்சய திருதியை..! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை – வெறிச்சோடி இருக்கும் நகை பட்டறைகள்


