Last Updated:
ராஜஸ்தானில் கோட்டா மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்த மகனுடன் வந்த தந்தைக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் விபத்தில் படுகாயமடைந்த மகனுடன் உதவிக்கு சென்ற தந்தைக்கும் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்த மணீஷ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த சனிக்கிழமை காலில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசக்கூட முடியாத நிலையில் உள்ள தனது தந்தை ஜகதீஷ் பஞ்சால்லை துணைக்காக மருத்துவமனைக்கு மணீஷ் வரவழைத்திருந்தார்.
இந்நிலையில், திட்டமிட்ட தினத்தன்று வெளியே தனது தந்தையை அமர வைத்துவிட்டு மணீஷ் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்த போது அவரது தந்தைக்கு கைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தனது உதவிக்காக வந்த தந்தைக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மணீஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெகதீஷ் என்ற வேறொரு நோயாளியை அறுவைசிகிச்சை அரங்கிற்குள் அழைத்த போது, மணீஷின் தந்தை தவறுதலாக சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாகவும் 3 நாட்களுக்குள் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளதாகவும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கீதா சக்சேனா தெரிவித்துள்ளார்.
April 18, 2025 6:13 PM IST


