Last Updated:
குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், பிரபல விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி அவர் தங்கியிருந்த சொகுதி விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பெண் நீரில் மூழ்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு அவரது கணவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கிருந்து ஏப்ரல் 5 ஆம் தேதி ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திருப்பிய அந்த பெண் தன்னை மருத்துவமனை ஊழியர்கள் ஐ.சி.யு.வில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது கணவரிடம் கூறியுள்ளார்.
மேலும், வெண்டிலேட்டரில் அரை மயக்கத்தில் இருந்ததால் என்னால் பேசமுடியவில்லை என்றும் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறியுள்ளார். லேசான மயக்கத்தில் இருந்தேன் அதனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை என்று கண்ணீர் விட்டிருக்கிறார் அந்த பெண். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சதார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் நடைபெற்றபோது அறையில் 2 செவிலியர்கள் இருந்ததாகவும், அவர்கள் இந்த குற்றத்தைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலம் நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாக மேதாந்தா மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 17, 2025 3:57 PM IST
ஐசியுவில் விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை.. மயக்கத்தில் இருந்தபோது அத்துமீறியது யார்? – போலீஸ் விசாரணை!


