Last Updated:
இஷா அம்பானி வர்த்தக துறையில் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட நபராக இருக்கிறார்
சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் (Federation of international Volley ball) நிர்வாகக்குழு உறுப்பினராக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகளும், ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக பிரிவின் தலைவருமான இஷா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கைப்பந்து வீராங்கனை லூயிஸ் பாவ்டனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருவரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இந்த பொறுப்பில் இருப்பார்கள். வர்த்தகத்தில் சிறந்த ஆளுமையாக இருந்து வரும் இஷா அம்பானியும், தடகள வீராங்கனை லூயிஸ் பாவ்டனும் கைப்பந்து நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கைப்பந்து சம்மேளன நிர்வாக சட்டங்கள் பிரிவு 2.4.1.5-ன் கீழ் இஷா அம்பானியும், லூயிசும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்ட பிரிவு கூடுதலாக 4 உறுப்பினர்களை நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. பல்வேறு தளங்களில் ஆளுமையாக இருப்பவர்களை நிர்வாகத்தில் இணைப்பதன் மூலம் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இஷா அம்பானி வர்த்தக துறையில் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட நபராக இருக்கிறார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் செயல் தலைமை பொறுப்பில் இருக்கும் இஷா அம்பானி இன்னும் பல நிறுவனங்களில் நிர்வாகத்திலும் திறமையாக செயல்படுகிறார். டிஜிட்டல், இணைய வர்த்தகத்தில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை இஷா திறமையாக கவனித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
பணியிடங்களில் மகளிரை சக்திபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நபராக இஷா செயல்படுகிறார். அவரது தனித்துவமான வர்த்தக தலைமை பண்புகள், புத்தாக்கம் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள ஆழமான பார்வை ஆகியவை சர்வதேச கைப்பந்து சம்மேளன நிர்வாகத்திற்கு மிகப்பெரும் சொத்துகளாக அமையும்.
இதையும் படிங்க – IPL 2025 : சென்னை அணியின் கேப்டனாக தோனி அறிவிப்பு.. காயம் காரணமாக ருதுராஜ் விலகல்
இதேபோன்று ஆஸ்திரேயிலாவை சேர்ந்த லூயிஸ் பாவ்டன் 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். கைப்பந்து சம்மேளன தலைவராக பொறுப்பில் இருந்த அனுபவமும் அவருக்கு உள்ளது. தடகள விளையாட்டு துறையில் லூயிஸ் பாவ்டனுக்கு உள்ள ஆழமான பார்வை, புரிதல், அனுபவம் சர்வதேச கைப்பந்து சம்மேளன நிர்வாகத்திற்கு பலமாக இருக்கும். என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
April 10, 2025 9:50 PM IST


