Last Updated:
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் குவித்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துள்ள பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 9 சிக்சர் 7 பவுண்டரியுடன் 103 ரன்கள் குவித்தார்.
சஷாங்க் சிங் 52 ரன்களும், மார்க்கோ யான்சன் 34 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியுள்ளது.
பஞ்சாப் அணியில் முக்கிய பேட்ஸ்மேன்களான பிரப்சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் வெறும் 3 பேட்ஸ்மேன்கள் இணைந்தே, பஞ்சாப் அணிக்கு வலுவான ஸ்கோரை எடுத்துக் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக இளம் வீரர் பிரியன்ஷ் ஆர்யா 39 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். சஷாங்க் சிங் 36 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 52 ரன்களும், மார்கோ ஜான்சென் 19 பந்துகளில் தலா 2 பவுண்டரி சிக்சருடன் 34 ரன்களும் எடுத்தனர்.
சென்னை அணி தரப்பில் 4 ஓவர்கள் வீசிய பதிரான 52 ரன்களை விட்டுக்கொடுத்தார். கலீல் அகமது, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் அவர்களது ஓவரிலும் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தனர்.
ரவிந்திரா ஜடேஜா மட்டும் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடந்த 3 போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 08, 2025 9:28 PM IST


