Last Updated:
Panguni Uthiram: பொதுவாக சுபதினங்கள், முக்கியமான விசேஷ நாட்களில் வாழை தாரின் விலையும் வரத்தும் அதிகரித்து காணப்படும்.
தென் தமிழகப்பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் வாழைத்தார்கள் தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு ஏலத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது.
தினமும் காலை 9 மணி அளவில் மார்க்கெட்டில் ஏலம் நடைபெறும். இந்த வாழைத்தார் ஏலத்தில் செவ்வாழை, நாட்டு வாழைப்பழம், கோழிக்கூடு, பச்சை பழம், பூலாஞ்செண்டு, கற்பூரவல்லி உள்ளிட்ட பலவகையிலான வாழைத்தார்கள் இங்கே ஏலத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.
வாழைத்தார் வரத்திற்கு ஏற்ப இங்கு வாழைத்தாரின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. தூத்துக்குடி மார்க்கெட்டில் ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்கள் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கடைகளில் விற்பனைக்கும், வெளி மாவட்டங்களில் விற்பனைக்கும் வாங்கிச் செல்லப்படுகின்றன.
இதையும் படிங்க: Panguni Uthiram 2025: குலதெய்வ அருளைத் தரும் பங்குனி உத்திரம் வழிபாடு… வீடுகளில் விரதமிருந்து வழிபடும் முறை…
பொதுவாக சுபதினங்கள், முக்கியமான விசேஷ நாட்களில் வாழை தாரின் விலை அதிகளவில் காணப்படும். ஆனால் வரும் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழை தாரின் விலை குறைந்து காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவில் வீசிய பலத்த காற்றினால் அதிகளவில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்து விட்டது. இதனால் ஏராளமான வாழைத்தார்கள் மார்க்கெட்டிற்கு வந்ததால் மக்கள் முன்னதாகவே வாழைத்தார்களை குறைந்த விலைக்கு வாங்கி விட்டனர். அதுவே வாழை தாரின் விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல பகுதிகளிலும் வாழைத்தார் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் தூத்துக்குடி மார்க்கெட் நிலவரம் தலைகீழாக உள்ளது.
இது குறித்து வாழைத்தார் கமிஷன் மண்டி உரிமையாளர் கூறுகையில், “பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு நாள் முன்பு அடித்த பலத்த காற்றினால் வாழை தார்கள் அதிகளவில் சேதம் அடைந்து, அதிகமான தார்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் வாழை தார்கள் விலை குறைந்து காணப்படுகிறது. இதனால் பங்குனி உத்திரம் வரை வாழை தார்களின் விலை கூடுவதற்கு வாய்ப்புகள் குறைவாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: Ooty Mariamman Temple: டெக்னாலஜி பாஸ்… ஒரு நொடியில் கால் கழுவும் இயந்திரம்… கோவிலில் இப்படியொரு வசதியா…
முன்பு 300 ரூபாய் வரை விற்பனையான சக்கை தார் 150 ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு வாழைத்தார் 500 ரூபாய் வரை விற்பனையானது தற்போது குறைந்து 200 ரூபாய் வரை விற்பனையாகின்றது. கோழிக்கூடு வாழைத்தார் 250 முதல் 400 ரூபாய் வரை விற்பனையாகின்றது. பச்சை வாழைத்தார் 150 முதல் 350 ரூபாய் வரை விற்பனையாகின்றது. செவ்வாழை தான் 850 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
April 08, 2025 8:14 PM IST

