Last Updated:
இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் 10 விநாடிகளில் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். ட்ரம்ப்பின் வரி விதிப்பால் பங்குச் சந்தைகள் பாதிப்பு.
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் 10 விநாடிகளில் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.. இந்தியாவைப் போலவே ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பால் அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் தொடங்கி இந்திய பங்குச் சந்தை வரை கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன் தாக்கம் திங்கள் கிழமை காலையில் ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியது.
ஹாங்காங், தாய்வான், ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், சுவிடன், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை கண்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் 9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தன.. இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு.
இந்திய வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சுமார் 3000 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டியில் 1000 புள்ளிகள் சரிந்தன. இந்த சரிவினால், முதலீட்டாளர்கள் 10 விநாடிகளில் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். பின்னர் சற்று மீண்டு, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 ஆயிரத்து 226 புள்ளிகள் குறைந்து 73ஆயிரத்து 137 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியில் 743 புள்ளிகள் குறைந்து 22 ஆயிரத்து 161 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது… இதன் காரணமாகவும் முதலீட்டாளர்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.. எனினும் சீனாவை விட இந்தியாவிற்கு பாதிப்பு குறைவு என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்…
இந்தியாவில் உலோகத்துறை பங்குகள் 8 விழுக்காடும், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 7 விழுக்காடு வரையும் சரிந்தன,ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 5 விழுக்காடு வரை சரிந்தன. பங்குச் சந்தைகளை போலவே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 30 காசுகள் வீழ்ச்சியடைந்தது.
உலக நாடுகள் மீது டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி விதிப்பு 9- ஆம் தேதி அமலாகிறது… அமெரிக்கா மீது சீனா அறிவித்துள்ள 34 சதவிகித வரி விதிப்பு 10- ஆம் தேதி அமலாகிறது. எனவே அடுத்த சில தினங்களில் உலக பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை காண வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்..
April 07, 2025 9:52 PM IST


