ஈப்போ: மூத்த நடிகை நூர் அசிசா அசிசுல் ஹசன் இன்று அதிகாலை கம்போங் சுங்கை பலோவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 79. யாயாசன் கெபாஜிகான் ஆர்டிஸ் தனஹெய்ர் தலைவர் டிஜே டேவ், நூர் அசிசாவின் மகள் கைரேனா காலமானதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
அவரது உடல் ஈப்போவில் உள்ள பலோ மசூதிக்கு கொண்டு செல்லப்படும். இன்று ஜுஹூருக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் செய்யப்படுன். மூச்சுத் திணறல் காரணமாக அதிகாலை 3 மணியளவில் அவர் இறந்தார் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
டேவின் கூற்றுப்படி, நூர் அசிசா ஐடில்ஃபிட்ரி கொண்டாட்டத்திற்காக கம்போங் சுங்கை பலோவுக்குத் திரும்பியிருந்தார். நூர் அசிசா 1965 ஆம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், ராஜா பெர்சியங் மற்றும் எனாம் ஜஹானாம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார், பின்னர் தயாங் செனான்டோங் படத்தில் புட்டேரி மவார்னி வேடத்தில் நடித்தார்.
பேராக்கின் கிந்தாவில் பிறந்த நூர் அசிசா, ஸ்ரீ அண்டலாஸ், ஜங்கன் திங்கல் டக்கு, துர்ஜானா, லக்சமானா டோ ரே மி, மற்றும் மாலிம் குண்டாங் உள்ளிட்ட சுமார் 20 படங்களில் நடித்தார். 1977ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட பெய்லி பேர்ட் என்ற நாடகத் தொடரிலும் அவர் நடித்தார். இதில் டாக்டர் சூசன் லிம் வேடத்தில் நடித்தார்.
மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் (செனிமான்) பொதுச் செயலாளர் ஹபீஸ் நஃபியா, நூர் அசிசா சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அவரது மறைவால் செனிமான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அவர் கூறினார். படைப்புத் துறை ஒரு திறமையான நடிகையை இழந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினருக்கு செனிமானின் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.


