Last Updated:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் 2025 – ஜூன் 2025 காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது.
நடப்பாண்டில் இந்த மாதம் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் இருக்கும் என்றும், மத்திய மற்றும் கிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிகளில் அதிக வெப்ப அலை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளை தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் 2025 – ஜூன் 2025 காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, “ஏப்ரல் முதல் ஜூன் வரை, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகள் இயல்பை விட 2 முதல் 4 நாட்கள் கூடுதலாக வெப்ப அலை நாட்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்” என்றார்.
“ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். இருப்பினும், தீவிர தெற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில பகுதிகளில் சாதாரண வெப்பநிலை இருக்கலாம். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்” என்று மொஹபத்ரா கூறினார்.
“பொதுவாக, இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நான்கு முதல் ஏழு வெப்ப அலை நாட்கள் பதிவாகும். இந்த சூழலில் இந்த ஏப்ரல் மாதத்தில் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், தீபகற்ப இந்தியாவை ஒட்டிய பகுதிகளில், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 2025-ல் நாடு முழுவதும் சராசரியாக பெய்யும் மழைப்பொழிவு, இயல்பானதாக இருக்கும்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.522.34 கோடி கூடுதல் நிதி.. மத்திய அரசு ஒதுக்கீடு!
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகள், தீபகற்ப இந்தியா, வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு-மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பானதைவிட அதிகமான மழைப்பொழிவு இருக்கும். நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 10 முதல் மாத இறுதி வரை, சில வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, கேரளா மற்றும் தெற்கு உட்புற கர்நாடகா பகுதியிலும் இயல்பான மழை மற்றும் மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
April 05, 2025 5:22 PM IST


