மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், திலக் வர்மா பேட்டிங் செய்துக்கொண்டிருக்கும்போது ஓய்வை அறிவித்து (Retired Out) சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்த மும்பை அணி, 191/5 என்ற ரன்னில் இருந்த போது, திலக் வர்மா 25 (23) ரன்களிலுடன் பேட்டிங் செய்துக்கொண்டிருந்தார். 19வது ஓவரில், மும்பை அணிக்கு ஏழு பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, மும்பை அணி திலக் வர்மாவை பெவிலியனுக்கு திரும்பச் சொன்னது.
இது முடிவு விவாதத்தை கிளப்பிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அந்த முடிவு வெளிப்படையாக இருந்தது. எங்களுக்கு அந்த நேரத்தில் பவுண்டரிகள் தேவைப்பட்டன. கிரிக்கெட்டில் சில நாட்கள் நீங்கள் முயற்சிக்கும் போது அது பலனளிக்காது” என்று கூறினார்.
முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா, முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்கள் கூடுதல் ரன்கள் கொடுத்ததும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் போதுமான அளவு செயல்படாததும் தோல்விக்குக் காரணம் என்று கூறினார். மேலும் தோல்விக்கு “முழு பொறுப்பையும் தாம் எடுத்துக் கொண்டதாக” கூறினார்.
இதையும் படிக்க: தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்..! டெல்லி அணியுடன் இன்று பலப்பரிட்சை
“தோல்வி அடையும்போது அது ஏமாற்றமளிக்கும். நாங்கள் அந்த விக்கெட்டில் 10-15 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்தோம். நான் எப்போதும் என் பந்துவீச்சை ரசித்திருக்கிறேன். ஆனால் எனக்கு அதிகமான ஆப்ஷன்கள் இல்லை. நான் விக்கெட்டைப் கவனித்து சில ஆப்ஷன்களை முயற்சிக்கிறேன். விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்கவில்லை. டாட் பந்துகளை வீச முயற்சிக்கிறேன். அப்போது பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன்.
ஒரு பேட்டிங் யூனிட்டாக, நாங்கள் தவறிவிட்டோம். நாங்கள் ஒரு அணியாக வெற்றி பெறுகிறோம், ஒரு அணியாக தோற்கிறோம். யாரையும் குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இதற்கான காரணத்தை முழு பேட்டிங் யூனிட்டும் எடுக்க வேண்டும். நான் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது, நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. எப்படி மீண்டு வருவீர்கள்? என்ற கேள்விக்கு, “நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று பாண்டியா கூறினார்.
மேலும், “நான் அதை எளிமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். சிறந்த முடிவுகளை எடுங்கள். பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருங்கள். பேட்டிங்கில் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். சில ஆக்ரோஷத்துடன் எளிய கிரிக்கெட்டை விளையாடுங்கள். இது ஒரு நீண்ட தொடர் என்பதால், இரண்டு வெற்றிகள் கிடைத்தால், எங்கள் அணி மீண்டு வரலாம் என தெரிவித்தார்.
April 05, 2025 12:42 PM IST

