Last Updated:
த்ரில்லர் படங்களை மிஞ்சும் உண்மை சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
2020ம் ஆண்டு மனைவியை கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி வேறு ஒரு நபருடன் வாழ்ந்து வருவது தெரிந்து கணவர் அதிர்ச்சியடைந்தார்.
கர்நாடக மாநிலம் குஷால்நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் மனைவி மல்லிகாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2020ம் ஆண்டு மல்லிகா காணாமல்போன நிலையில் இதுகுறித்து சுரேஷ் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் 7 மாதங்களுக்கு பிறகு எலும்பு கூடு ஒன்றை காண்பித்து, இது தங்கள் மனைவியா என அடையாளம் காட்ட சுரேஷிடம் கேட்டதாக தெரிகிறது. எலும்புகூடுக்கு அருகே மனைவியின் செருப்பு இருந்ததால், சுரேஷ் தனது மனைவி தான் என கூறியிருக்கிறார். இதனையடுத்து, மனைவியை கொலை செய்ததாக சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டிஎன்ஏ பரிசோதனையில் அது மல்லிகாவின் எலும்பு கூடு இல்லை என்பது தெரியவந்ததையடுத்து, சுரேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மடிகேரி பகுதியில், மல்லிகா, வேறொருவருடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததை சுரேஷ் பார்த்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மல்லிகாவை அழைத்து சென்றனர். விசாரணையில், மல்லிகா காதலரான வேறு ஒரு நபருடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மல்லிகாவை மகளிர் இல்லத்துக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. தான் கொலை செய்ததாக கூறப்பட்ட மனைவி உயிருடன் வந்ததால் சுரேஷ் நிம்மதியடைந்துள்ளார். அப்படியன்றால் சுரேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் யார்?, எதன் அடிப்படையில் சுரேஷ் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 04, 2025 10:25 PM IST
த்ரில்லர் படங்களை மிஞ்சும் உண்மை சம்பவம்.. 5 ஆண்டுகளுக்கு முன் கொலை.. திடீரென உயிருடன் வந்த பெண்.. என்ன நடந்தது?


