மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சிறைக்குச் செல்வது நிச்சயம் என்றும், அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. தேர்வுகளில் பதில் எழுதாத வெற்று தாள்களைச் சமர்ப்பித்த பலருக்கும் போலியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டனர் என்பதே புகாராகும். மேலும், 24,640 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 25,753 பேருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டதும் சர்ச்சையானது.
இதையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 26 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஆள்சேர்பை ரத்து செய்த உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஹரியாணாவில் ஓ.பி.சௌதாலாவுக்குப் பிறகு ஆசிரியர் ஆள்சேர்ப்பில் சிறைக்குச் செல்லும் இரண்டாவது முதலவர் மமதா பானர்ஜி என்று மத்திய அமைச்சரும் மேற்குவங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் கூறினார். பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தின் முழு பலமும் அவர் மீது பாயும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா வலியுறுத்தினார்.
இதையடுத்து சம்பித் பத்ரா கூறுகையில், மமதா பானர்ஜிக்கு ஆட்சியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை, அவருக்குப் பொறுப்புணர்வு இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும். அவர் நிச்சயமாகச் சிறைக்குச் செல்வார் என்றார்.
பணியமர்த்தப்பட்ட 26 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் மாநிலத்தின் ஆளும் டிஎம்சி தலைவர்களால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட மோசடியில் பயணடைந்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தகுதியான ஊழியர்களுக்கு ஆளும் கட்சியின் நிதி அல்லது முதல்வர் நிவாரண நிதி மூலம் அரசு சம்பளம் வழங்க வேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மமதா பானர்ஜி கூறியதைக் குறிப்பிட்ட அவர், மமதா மீது உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 25,753 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

