புவிசார் குறியீடு பெறும் அளவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியான தோவாளையில் தயாராகும் இந்த மாணிக்க மாலையில் அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது எனப் பார்க்கலாம்…
400 ஆண்டு பாரம்பரியம் கொண்ட, தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்கமாலை உலகில் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகத் திகழ்கிறது. இந்த மாலை வெள்ளை, சிவப்பு வண்ண அரளிப் பூக்கள், நொச்சி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மற்ற மாலைகள் போல் அல்லாமல் சம்பா வாழை நாரைக் கொண்டு மட்டும்தான் கட்டுகின்றனர்.
இதையும் படிங்க: Thovalai Manikka Malai: பத்மநாபசுவாமி சூடும் மாலை… மன்னர் வைத்த பெயர்… தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார்குறியீடு அந்தஸ்து…
இந்த மாலை கேரளத்தை ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்திலிருந்தே கட்டப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட தோவாளை பூச்சந்தை தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் மிகவும் பிரபலமும், பழமையுமானதாகும். தமிழகம் மட்டுமல்லாது, கேரள மாநிலத்துக்கும் தோவாளை பூச்சந்தையில் இருந்து பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாகப் பூக்கள் விற்பனை உள்ளது. பூக்கள் விளைவித்தல், பூக்கள் கட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல நிலைகளில் தோவாளை, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி என்பவர் தோவாளை மாணிக்க மாலை மற்றும் கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில், தற்போது தோவாளை மாணிக்க மாலை மற்றும் கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Summer Vacation: சம்மர் ஹாலிடே என்ஜாய் பண்ண பெஸ்ட் ஸ்பாட்… நீலகிரியில் மிஸ் பண்ண கூடாத 10 ஸ்பாட்…
ஒரு மாணிக்கமாலை தயாரிக்க, சுமார் 4 மணி நேரமாகும். தற்போது இந்த மாலை தயாரிப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சொற்பமாகி விட்டது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கும், திருவனந்தபுரம் அரண்மனைக்கும் அனுப்பப்பட்டு வந்தது. மாணிக்கமாலை தெய்வ விக்கிரகங்களுக்கு மட்டுமே அணிவிக்கப்பட்டு வந்தது. திருமணங்களுக்குத் தயார் செய்கையில் மட்டும் அரளிப் பூக்களுக்கு பதில் ரோசாப்பூக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெறும் மகர சங்கராந்தி, கற்கடகவாரபலி உள்ளிட்ட திருவிழாக்களில் மாணிக்கமாலை அதிக அளவில் தேவைப்படும். அதேபோல், பிரம்மோற்சவத்தின் போதும் ஆறு அடி உயரத்துக்கு மேல் மாணிக்கமாலையை கடவுளுக்கு அணிவிப்பார்கள். சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில், நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், திருநெல்வேலி நம்பிகோவில் உள்ளிட்ட கோவில் திருவிழாக்களின் போது இந்த மாணிக்கமாலை பிரதான இடம் பிடிக்கும்.
மாணிக்க மாலையின் வடிவம், நுட்பமான வேலைப்பாடின் அடிப்படையில் விலையும் இருக்கும். சிவன் கோவிலுக்கு சிவலிங்கம், நந்தி திருமேனி மாலையில் வடிவமைக்கப்படும். பெருமாள் கோவிலுக்கு சங்கு, சக்கரம் கொண்டும் தயாரிக்கப்படும். திருமணங்களுக்கு மாலை கேட்போர் மாணிக்க மாலையில் மணமக்களின் பெயரைப் பொறித்தும் தயார் செய்வதும் வழக்கம்.
இதையும் படிங்க: Thooka Nerchai: குழந்தைகளுக்காகப் பெற்றோரின் விஷேச வேண்டுதல்… கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை பற்றி தெரியுமா…
முறையான பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே மாணிக்க மாலை தயார் செய்ய முடியும். சில வருடங்களுக்கு முன்னர், கேரள மாநிலத்துக்கு இந்த மாலை தயார் செய்பவர்களை அழைத்துக் கௌரவித்த மகாராணி தம்புராட்டி 1949ஆம் ஆண்டில் வெளிவந்த நூலில் வீரமார்த்தாண்ட மகாராஜாவுக்கு மாணிக்கமாலை அணிவித்தது குறித்துக் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மாமல்லபுரத்தில் 2019ஆம் ஆண்டில் சீன அதிபரைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தபோதும், மாணிக்கமாலை கட்டுவது குறித்து நேரில் விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் சார்பில், பூம்புகார் கைவினை கழகத்தின் சார்பில் இப்பகுதியில் மாலை தயாரிப்புக்கு மாநில விருதை அப்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அளித்தார்.
தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்காகக் கடந்த இரு ஆண்டுக்கு முன்பே விண்ணப்பித்தனர். இதுகுறித்து பரிசீலித்து அறிக்கை தருமாறு அரசுத் தரப்பில் கோரப்பட்டது. தோவாளை மாணிக்கமாலை என்பது சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம் கொண்டது. இந்த மாலை ஒரு மனித உடம்பின் அமைப்பைப் போலவே நடுவில் ஒரு நரம்பைக் கொண்டும் முடிவில் ஒரு நரம்பால் இணைக்கப்பட்டும் கட்டப்படுகிறது.
இதையும் படிங்க: பாட்டி காலத்து ஹெல்த் சீக்ரெட்… கண்ணு முன்னாடியே இருந்தும் யூஸ் பண்ணாமல் விட்ட பொக்கிஷம்…
இந்த மாலை மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கட்டப்படுகிறது. இந்த மாலை கட்டும் லாவகம் தோவாளையைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கே உரித்தாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் காலத்திலிருந்தே இந்த மாணிக்கமாலை கட்டும் தொழில் இருந்துள்ளது. இந்த மாலையின் அமைப்பைப் பார்த்து திருவிதாங்கூர் மன்னர் தான் மாணிக்கமாலை என பெயரிட்டதாகவும் கூறுகின்றனர்.
எனவே பாரம்பரியம், பழைமை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இதை ஆராய்ந்து பார்த்ததில் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைத்ததில் மாணிக்க மாலை தயார் செய்யும் மக்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Kanniyakumari,Tamil Nadu
April 03, 2025 5:10 PM IST

