Last Updated:
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
மியான்மரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர் 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு முறை ஏற்பட்ட நில அதிர்வில், முதல் நில அதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியுள்ளது. மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், “மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம்” என்று அச்சம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் 125 மணி நேரம் கழித்து ஆண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. மியான்மரில் நிலநடுக்க மீட்புப் பணிகளை சர்வதேச மீட்புக் குழுவினர் மேற்கொண்டுவரும் நிலையில், கோல்டன் கன்ட்ரி ஹோட்டல் என்ற பகுதியில் இடிந்த கட்டடத்தை சீனக் குழுவினர் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது இடிபாடுகளுக்கு மத்தியில் ஆண் ஒருவர் உயிருடன் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்டனர். மீட்கப்பட்ட நபர், உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இடிபாடுகளில் இருந்து 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் கட்டிட இடுபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
April 03, 2025 6:00 PM IST
மியான்மர் நிலநடுக்கம்: 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வந்த நபர்.. மீட்புக் குழுவினர் செய்த நெகிழ்ச்சி செயல்!