Last Updated:
பெற்றோரின் திருமண ஆல்பத்தில் இருந்த போட்டோவை பள்ளிக்கு எடுத்துச் சென்று, இது தான் தனது அம்மா என்று நண்பர்களிடம் காட்டியுள்ளார்.
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மகள் மற்றும் மாமியார் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற ஓட்டுநர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்னகர். வேன் டிரைவரான இவருக்கு திருமணமாகி, 6 வயதில் மவ்யா என்ற மகள் இருந்தார். தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரத்னகரின் மனைவி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால், ரத்னகர் தனது மகள் மவ்யாவை, மாமியார் ஜோதியின் பராமரிப்பில் விட்டுள்ளார். அதே வீட்டில், சிறுமியின் சித்தி நந்தினி சிந்து மற்றும் அவரின் கணவர் அவினாஷ் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், பள்ளியில் சிறுமி மவ்வாயின் நண்பர்கள் உனது அம்மா எங்கே என்று அடிக்கடி கேட்டுள்ளனர். அதற்கு விடை தெரியாத சிறுமி, தனது தந்தையிடம் அம்மா எங்கே என்று கேட்டு கண்ணீர் சிந்தியுள்ளார். ஒருநாள் அந்த சிறுமி, பெற்றோரின் திருமண ஆல்பத்தில் இருந்த போட்டோவை பள்ளிக்கு எடுத்துச் சென்று, இது தான் தனது அம்மா என்று நண்பர்களிடம் காட்டியுள்ளார். இந்த நிகழ்வை அறிந்து ரத்னகர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
தனது மகளின் நிலையை அறிந்து விபரீத முடிவு எடுத்தவர், துப்பாக்கியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில், மகள் மவ்யா, மாமியார் ஜோதி, மச்சினிச்சி சிந்து ஆகியோர் குண்டடிபட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிந்துவின் கணவர் அவினாஷ் காலில் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
கொலைபாதக செயலில் ஈடுபட்ட ரத்னகரும், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தான் விபரீத முடிவு எடுத்ததற்கான காரணம் குறித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சிக்மங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மகள் மற்றும் மாமியார் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற வேன் டிரைவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
April 03, 2025 4:33 PM IST
பிரிந்து சென்ற மனைவி.. தொடர்ந்து அடம்பிடித்த மகள்.. டிரைவர் செய்த பதறவைக்கும் செயல்.. என்ன நடந்தது?