பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு மாறுவதே அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால், இந்தியாவில் மருந்து, ஐடி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் உட்பட பல துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
Reciprocal Tariff என்றால் என்ன?
இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிப்பது தான் Reciprocal Tariff (பரஸ்பர வரி விதிப்பு) ஆகும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தற்போது 52 சதவிகிதம் வரி வசூலித்து வருகிறது.
அதே சமயம், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெருவாரியான பொருட்களுக்கு இதுவரை வரி எதுவும் வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய பரஸ்பர வரி அறிமுகம் மூலம், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி வசூலிக்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்படும் துறைகள்
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு 25% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதால், தமிழ்நாட்டில் தயாரித்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகும் பல யூனிட் கார்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருந்துகள், ஐடி, இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமொபைல்கள், ஆட்டோ பாகங்கள், சுகாதாரத்துறை ஆகிய துறைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, இந்த வரி விதிப்பு நடவடிக்கை ஒரு பெரிய தலைவலியாக மாறக்கூடும். ஏனென்றால், பல முக்கிய துறைகள் கடுமையாக பாதிக்கப்படலாம். இது சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கூட்டு நிறுவனங்கள் வரை பல நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
April 03, 2025 12:49 PM IST