மத்திய அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 2024 என்பதை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து முஸ்லிம்களும், எதிர்க்கட்சியினரும் கடந்த சில மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்திலும் இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்து பேசினார். இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது அதில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெறுவார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன.
அவை குறித்தும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக சர்ச்சைகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
முதலில், முஸ்லிம் அல்லாதவர்கள் யாரும் வக்ஃபுக்குள் வரமாட்டார்கள். இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்… மத நிறுவனங்களை நிர்வகிப்பவர்களில் முஸ்லீம் அல்லாத எவரையும் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பறி போய்விடக் கூடாது என்பதற்காக இந்த தவறான கருத்து எதிர்க்கட்சிகளால் பரப்பப்படுகிறது
முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் வேலை என்பது மத விஷயங்களில் தலையிடுவது அல்ல. வக்ஃப் சட்டத்தின் நிர்வாகம் மற்றும் நன்கொடைகளுக்கு வழங்கப்படும் நிதிகள் சீராக நடக்கிறதா இல்லையா என்பதைக் கண்காணிப்பதுதான் இவர்களின் வேலை.
நன்கொடைகள் இஸ்லாமிய மதத்திற்காக, ஏழைகளின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதைக் கண்காணிப்பார்கள்.
உங்கள் வக்ஃபுக்குள் ஒரு முஸ்லிமல்லாத ஒருவர் கூட வரமாட்டார் என்பதை இந்த சபையின் மூலம் நான் நாட்டு முஸ்லிம்களுக்கு கூற விரும்புகிறேன். இந்தச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு இல்லை. ஆனால் வக்ஃப் வாரியமும் வக்ஃப் கவுன்சிலும் என்ன செய்யும் என்றால், வக்ஃப் சொத்துக்களை விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
வக்ஃப் பெயரில் 100 ஆண்டுகள் குத்தகைக்கு விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் சிறுபான்மையினர் வளர்ச்சி நிதி தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
இப்போது வக்பு சொத்துகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருப்புநிலை அறிக்கைகளை ஓய்வுபெற்ற CAG அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள். இதனால் வெளிப்படைத் தன்மை ஏற்படும். வெளிப்படைத்தன்மைக்கு ஏன் யாரும் பயப்பட வேண்டும்? மேலும் வக்பு வாரியம் அல்லது கவுன்சிலின் எந்த உத்தரவையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
வாக்கு வங்கி அரசியலுக்காக எந்த சட்டத்தையும் பாஜகவும், மோடி தலைமையிலான அரசும் கொண்டுவராது. நீதிக்காக மட்டுமே சட்டம் கொண்டு வரப்படுகிறது. என்று தெரிவித்தார்.
April 02, 2025 8:31 PM IST

