காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நன்கொடையாக ரூ.8,200 கோடி பாஜக வசூலித்த நிலையில், ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக் கூறி தங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் மூலம் தீவிரவாத தாக்குதலை நடத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி 2017 – 18 ஆம் ஆண்டிலிருந்து 2020- 21 ஆண்டு வரை கிடைத்த வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரிறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரூ.1,700 கோடி அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்துரூ.1,823 கோடி கட்ட சொல்லி காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், அஜய் மக்கான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நன்கொடை வழங்கியவரின் பெயர், முகவரி உள்ளிட்ட KYC விவரங்கள் இல்லை என காங்கிரசுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதே காரணத்துக்காக பாஜகவிடம் ரூ.4, 617 கோடி அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் இதன் மூலம் பிரதமர் மோடியின் உண்மையான பாசிச முகம் தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி நாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. பழைய பான் எண்ணை பயன்படுத்தியதற்காக இந்த தொகையை செலுத்த உத்தரவிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் எம்.பி. சாகேத் கோகலே, கடந்த 3 நாட்களில் 11 வருமான வரி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அமலாக்கத்துறையைத் தொடர்ந்து தற்போது வருமான வரித்துறையை பாஜக இறக்கியிருப்பதாக சாகேத் கோகலே விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வருமான வரி பாக்கிக்கு, கடந்த 7 ஆண்டுகளில் பாஜகவுக்கு ரூ.4, 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் பாஜகவுக்கு வருமான வரித்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், வருமானவரித் துறையின் நடவடிக்கையை கண்டித்து, நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதனிடையே புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சிக்கு திடீரென ரூ.1,823 கோடி வரி மற்றும் அபராதம் செலுத்த கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை கேட்டாலே சிரிப்பு வருகிறது என்றார். பாஜக தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.8,250 கோடி கொளுத்த கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாங்கியுள்ளது. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சி மீது வருமான வரி விதிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி மீது வருமான வரி விதிக்கிறது. அதற்கு வட்டி தண்டத்தீவு இப்படி எது வேண்டுமென்றாலும் போடுவார்கள். இது அனைத்து கட்சிகளுக்கும் எச்சரிக்கை. ஏற்கனவே இரு முதலமைச்சர்களை கைது செய்தது அனைத்து முதலமைச்சர்களுக்கும் எச்சரிக்கையோ. அதேபோன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மீது வரி விதிப்பது வட்டி போடுவது , அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. அதற்கும் மேல் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
