“சத்தம் இல்லை, தலைப்புச் செய்திகள் இல்லை. ஆனால், தொழில்துறையில் அமைதியான சதுரங்கம்” என்ற தலைப்பில் அவர் சமீபத்தில் தனது எக்ஸ் பிளாட்ஃபார்மில் போஸ்ட் ஷேர் செய்தார். இந்த போஸ்ட்டில் இந்தியா உச்சி மாநாடுகளை நடத்துவதிலும் கொள்கை ஆவணங்களை உருவாக்குவதிலும் மும்முரமாக உள்ள அதே நேரம் சீனா உலகளாவிய விநியோகச் சங்கிலியை சத்தமே இல்லாமல் மறுவரையறை செய்து வருகிறது என்று விவேக் காத்ரி குறிப்பிட்டுள்ளார்.
இது மெதுவாக நடைபெற்று வரும் ஒரு வகையான தொழில்துறை போர். இந்த விஷயத்தில் சீனா ஏற்கனவே இந்தியாவை விட மூன்று படிகள் முன்னால் உள்ளது. சீனா தனது வர்த்தக உபரியை (ஏற்றுமதியின் மதிப்பு அதன் இறக்குமதியின் விலையை விட அதிகமாக இருக்கும் தொகையை) ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. இதற்காக சீனா ‘சீனா பிளஸ் ஒன்’ என்ற உத்தியை முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் சீனா மற்ற நாடுகளில் முதலீடு செய்கிறது. ஆனால், இந்த முதலீடு நடவடிக்கையில் இந்தியா வேண்டுமென்றே விலக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் முக்கியமான தொழில்துறை உள்ளீடுகளை சீனா இழக்கச் செய்து வருவதாகவும், உலகில் முக்கியமான உற்பத்தி சக்தி கொண்ட நாடாக வலுப்பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் காத்ரி கூறுகிறார்.
எனினும், இன்னும் கூட இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் காகித வேலைகளை குறைத்து பிற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவுபடுத்தி, இன்டஸ்ட்ரியல் கிளஸ்டர்களை உருவாக்கி, அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால், சீனாவின் மறைமுக திட்டங்களை எதிர்கொள்ள முடியும். இந்தியா மாநாடுகள் மற்றும் கொள்கைகளில் மும்முரமாக உள்ளது, அதே நேரத்தில் சீனா அமைதியாக விநியோகச் சங்கிலிகளை மறுவடிவமைத்து வருவது, நிச்சயம் சத்தமின்றி நடைபெற்று வரும் தொழில்துறை போர் என்றுதான் கருதுவதாக காத்ரி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் வர்த்தக உபரி முதலீடு என்பது உண்மையில் எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்று அல்ல, அது ஒரு புவிசார் அரசியல் ஆயுதம் என்று காத்ரி கூறுகிறார். இதனிடையே ‘சீனா பிளஸ் ஒன்’ உத்தியின் கீழ், சீன நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் தங்கள் விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்துகின்றன. ஹங்கேரி, மெக்சிகோ, மொராக்கோ, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் சீனா முதலீடு செய்கிறது. இதற்கு இந்த நாடுகள் சீனாவுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குகின்றன. இந்நாடுகள் சீனாவுடன் போட்டியிடுவதில்லை என்ற எண்ணத்தில் செயல்படுவதால், இதற்கு ஈடாக சீனாவிலிருந்து கணிசமான முதலீடுகளைப் பெற்று ஆதாயமடைந்து வருகின்றன எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ISRO | செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி… இனி அதிக எடை வாகனம் கொண்டு செல்ல சாத்தியம்!
இந்த உத்தியில் இருந்துதான் இந்தியாவை வேண்டுமென்றே சீனா ஒதுக்கி வைத்துள்ளதாக காத்ரி நம்புகிறார். சீனாவைப் போல உற்பத்தியில் முன்னேறக்கூடிய சிறந்த ஒரு நாடு இந்தியா. ஆனால், அந்த வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்க சீனா விரும்பவில்லை. இந்தியாவில் மின்னணு சாதனங்களுக்கான வெற்றிக் கதையாகக் கருதப்படும் ஆப்பிள் போன்ற ஒரு நிறுவனம் கூட எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. அதன் உலகளாவிய இலக்கான 25% உடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தி 15% மட்டுமே. வேலைநிறுத்தங்கள், தாமதங்கள் போன்றவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள்.. ரூ.62,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்து!
வியட்நாமின் மின்னணு ஏற்றுமதி 126 பில்லியன் டாலர்களாக உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 26 பில்லியன் டாலர்களாக உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். சீனாவின் தந்திரமான இந்த உத்தியை வெல்ல இந்தியா துறைமுகம் மற்றும் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் மற்றும் தீவிர அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்தியா சீனாவாக மாறத் தேவையில்லை, ஆனால் கொள்கைகள் மட்டுமே வகுப்பதை நிறுத்திவிட்டு போர்க்கால அவசரத்துடன், தேவையான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்க வேண்டும் என்று விவேக் காத்ரி வலியுறுத்தி உள்ளார்.
March 30, 2025 10:54 AM IST
உலகளாவிய உற்பத்தி சந்தையிலிருந்து இந்தியாவை ஒதுக்கி வைக்க சத்தமே இல்லாமல் வேலை செய்யும் சீனா…!

