Last Updated:
அப்சரா கொலை வழக்கில் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்சராவின் தாய்க்கு 9.75 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவு.
தெலங்கானாவில் சீரியல் நடிகையை கொலை செய்து சாக்கடையில் வீசிய வழக்கில், அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த அப்சரா என்பவர் கோயம்புத்தூரை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை மணந்து மணமுறிவு ஏற்பட்ட காரணத்தால் மீண்டும் ஹைதராபாத்திற்கு சென்று தன்னுடைய தாய் அருணாவுடன் வசித்து வந்தார். முன்னர் டிவி சீரியல்களில் சிறிய அளவிலான ரோல்களில் நடித்திருந்தார் அப்சரா. தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த அப்சரா மன நிம்மதிக்காக தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அப்போது பங்காரு மகிசமா கோவில் பூசாரி வெங்கடசாய் கிருஷ்ணா உடன் அப்சராவுக்கு அறிமுகம் ஏற்பட்டு காதல் ஆக மாறியது.
36 வயதான சாய் கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தன்னுடைய திருமணம், குழந்தைகள் ஆகியவற்றை மறைத்து அப்சராவுடன் நெருங்கி பழகி வந்தார் சாய் கிருஷ்ணா. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்சரா பூசாரி வெங்கடசாய் கிருஷ்ணாவுக்கு அழுத்தம் கொடுத்தார். எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்த சாய் கிருஷ்ணா தகுந்த நேரத்திற்காக காத்திருந்தார்.
இந்நிலையில் அப்சரா கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தார். அதன்படி அவரை தன்னுடைய காரில் ஏற்றி விமான நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறிய சாய் கிருஷ்ணா, சம்சாபாத் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அப்சராவை காருக்குள்ளேயே கடுமையாக தாக்கி நிலைகுலைய செய்து அவருடைய முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சு திணறல் ஏற்பட செய்து கொலை செய்தார் பூசாரி வெங்கடசாய் கிருஷ்ணா.
பின்னர் அப்சரா உடலுடன் காரை வீட்டிற்கு ஓட்டி சென்ற சாய் கிருஷ்ணா உடல் அழுகி துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க காருக்குள் ரூம் ஸ்பிரேயை தெளித்தார். இப்படி 2 நாட்கள் அந்த உடலை காரிலேயே வைத்திருந்த சாய் கிருஷ்ணா பின்னர் காரை ஹைதராபாத் புறநகர் பகுதிக்கு ஓட்டி சென்று அங்கு திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் அப்சரா உடலை போட்டு அந்த சாக்கடையை மூடி சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக சிமெண்ட் பூசி வீட்டுக்கு சென்றார்.
இதற்கிடையே அப்சராவை தொடர்பு கொள்ள அவருடைய தாய் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அங்கு வந்த சாய் கிருஷ்ணா நானும் அப்சராவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்று நடிக்க துவங்கினார் பூசாரி சாய் கிருஷ்ணா. பின்னர் அப்சரா தாய் அருணா உடன் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அப்சராவை காணவில்லை என்று புகார் கொடுத்தான் பூசாரி சாய் கிருஷ்ணா. அப்சராவின் தாய் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அப்சராவை தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் சாய் கிருஷ்ணா நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே தங்கள் விசாரணை வளையத்திற்குள் பூசாரி சாய் கிருஷ்ணாவை கொண்டு வந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது அப்சராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவல் அடிப்படையில் பாதாள சாக்கடையில் இருந்து அழுகி நிலையில் அப்சராவின் உடலை மீட்ட போலீசார் ரங்கா ரெட்டி நீதிமன்றத்தில் பூசாரி சாய் கிருஷ்ணா மீது கொலை வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அப்சராவின் தாய்க்கு ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும் சாய் கிருஷ்ணா செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Hyderabad,Telangana
March 29, 2025 6:21 PM IST
சீரியல் நடிகையை கொடூர கொலை செய்து சாக்கடையில் வீசிய சம்பவம்… கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!


