மியான்மரின் மாண்டலே நகர் அருகில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவிலும், 6.4 என்ற அளவிலும் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் என்ற குறுகிய ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், மியான்மிரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து, சாலைகள் பெயர்ந்தன. அதன் பிறகும், அவ்வப்போது நில அதிர்வு உணரப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், கட்டடக் குவியலுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து மீட்பு படை ஈடுபட்டு வருகிறது.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதையொட்டிய தாய்லாந்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாங்காக்கில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 30 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இதில், 40 பணியாளர்கள் சிக்கிய நிலையில், 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் லெய்ங்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு ஆறுதல் தெரிவித்தார்.
அண்டை நாடு என்ற முறையிலும் நெருங்கிய நட்பு நாடு என்ற வகையிலும் இந்த துயரமான தருணத்தில் தாங்களும் பங்கெடுப்பதாக தெரிவித்ததாக எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆப்ரேஷன் பிரம்மா என்ற திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி.130 ஜே என்ற விமானத்தில், தார்பாய், மெத்தை, போர்வை, நீர் சுத்திகரிப்பான், சோலார் விளக்குகள், மருந்து, மாத்திரைகள், கையுறைகள் உட்பட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை, மியான்மரில் உள்ள யாங்கூன் நகருக்கு சென்றடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், உதவிக்காக 2 கடற்படை விமானங்களை அனுப்பி உள்ளதாகவும், ஆக்ராவில் இருந்து விமானப்படை விமானம் மூலம் 118 பேர் கொண்ட மருத்துவக்குழுவை அனுப்பி உள்ளதாகவும்
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
தமிழக அயலக தமிழர் நலத்துறை
இதே போல், மியான்மர் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு, பிரத்யேக தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தமிழக அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: –
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் -1800 309 3793 (இந்தியா)
+91 8069009901 (வெளிநாடு)
மின்அஞ்சல் – nrtchennai@gmail.com
March 29, 2025 9:50 PM IST
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்; தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு

