Last Updated:
மியான்மரில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம், 1,002 பேர் பலி, 2,376 பேர் காயம். அமெரிக்க புவியியல் மையம் பலி எண்ணிக்கை 10,000 கடக்கலாம் என எச்சரிக்கை. இந்தியா நிவாரணம் அனுப்பி உதவி.
மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நில அதிர்வு, மியான்மரின் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், மதியம் 12:50 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. மொத்தம் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல் நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியது.
இதில், மியான்மரில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இடிபாடுகளில் சிக்கி 2,376 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 10 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 68 பேர் காயமடைந்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால், மியான்மரில் பல கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தற்போது அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்துவருகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை இன்னும் உயருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள் : “இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுடன் இந்தியா நிற்கிறது” – பிரதமர் மோடி
இந்நிலையில், அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், “மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம்” என்று அச்சம் தெரிவித்துள்ளது.
அதேசமயத்தில், இந்தியாவில் இருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில், அனுப்பி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்குச் சென்றடைந்தன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, “ஆப்ரேஷன் பிரம்மா” என்ற திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.
March 29, 2025 6:22 PM IST
மியான்மர் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 10,000 கடக்கலாம் – அமெரிக்கா புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவல்


