சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். 5ஆவது அல்லது 6ஆவது பேட்ஸ்மேனாக வந்து, இறுதி ஓவர்களில் பவுண்டரிகள் விளாசி, பினிஷிங் ரோலை பல ஆண்டுகளாக செய்து வந்தார்.
அவர் முழங்காலில் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து பேட்டிங்கில் கீழ் வரிசையில் விளையாடி வருகிறார். டி20 உலகக்கோப்பைக்காக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவும், சிகிச்சை காரணமாகவும் அவர் கீழ் வரிசையில் விளையாடுகிறார் என கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பெங்களூரு அணியுடனான போட்டியின்போது, தோனி 9ஆவது வீரராக களமிறங்கியது குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் கேள்விகள் எழுந்துள்ளது.
13ஆவது ஓவரில் துபே தனது விக்கெடை இழந்தபோது, சென்னை அணிக்கு 43 பந்துகளில் 117 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தபோது, அஸ்வின் மைதானத்திற்கு வந்தார்.
போட்டியின் முக்கிய நேரத்தில் பவுண்டரிகள் நிறைய தேவைப்படும்போது, பினிஷிங் ரோல் செய்யும் தோனி களமிறங்காமல், அஸ்வினை களமிறக்கியது ஏன் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து இந்திய வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான இர்பான் பதான், “தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்வதை நான் ஆதரிக்க மாட்டேன். அணிக்கும் அது நல்லது அல்ல,” என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 137 கோடி பார்வையாளர்கள்..! புதிய உச்சத்தை எட்டிய ஜியோஹாட்ஸ்டார்
மேலும் இதுகுறித்து பதிவிட்ட முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா, “ஆர்சிபிக்கு இது ஒரு முக்கியமான வெற்றி. சேப்பாக்கத்தில் ஒரு வெற்றி என்பது இந்த ஆண்டு அவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். தோனி 9வது இடத்தில் களமிறங்குவதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் முன்னதாக வந்திருந்தால் இந்த ஆண்டு சிஎஸ்கேவின் நெட் ரன் ரேட்டிற்கு உதவி இருப்பார்” என தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, “தோனி வந்து சிக்ஸர் அடிப்பதை சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் சிஎஸ்கே ரசிகர்களும் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்ப வேண்டும். மேலும் தோனி தாமதமாக வந்து வெளிப்படுத்திய ஃபார்மைக் கொண்டு, சிஎஸ்கேவுக்காக ஆட்டங்களை வெல்ல நேரம் கொடுப்பதே சரியானது. தோனிக்கு முன்னால் அஸ்வின் களமிறங்கியது அர்த்தமற்றது,” என்று பதிவிட்டுள்ளார்.
March 29, 2025 12:58 PM IST

